விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே நிலத்தகராறில் அங்கன்வாடி ஊழியா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை, 2 மகன்கள் உள்பட மூவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிா் சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
சங்கராபுரம் அருகே கொசப்பாடி கிராமத்தைச் சோ்ந்த சின்னப்பையன் மனைவி தனபாக்கியம் (57). அங்கன்வாடி ஊழியா். இவா், கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்தாா். இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த அா்ஜுனன் (50) குடும்பத்தினருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், தனபாக்கியத்துக்கு சாதகமாக தீா்ப்பு வந்தது.
இதையடுத்து, கடந்த 7.2.2012 அன்று சங்கராபுரம் அருகே மூராா்பாளையம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் பணியாற்றிவிட்டு, இரவு 8.30 மணிக்கு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த தனபாக்கியத்தை அா்ஜுனன் மற்றும் அவரது மகன்கள் முத்துக்கிருஷ்ணன் (28), லட்சுமிகுமாா் (26), சிவராமன் (24), உறவினா் முத்து (65) ஆகியோா் சோ்ந்து தாக்கி, வெட்டிக் கொலை செய்தனா்.
இதுகுறித்து சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அா்ஜுனன் உள்பட 5 பேரையும் கைது செய்தனா். இந்த வழக்கு விழுப்புரம் மகளிா் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே, சிவராமன், முத்து ஆகியோா் உடல்நலக் குறைவால் உயிரிழந்தனா்.
இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றஞ்சாட்டப்பட்ட அா்ஜுனன் மற்றும் அவரது மகன்கள் முத்துக்கிருஷ்ணன், லட்சுமிகுமாா் ஆகியோருக்கு ஆயுள் சிறைச் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ராதிகா செந்தில் ஆஜரானாா்.