திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸை திங்கள்கிழமை பகல் 12.25 மணிக்கு, அதிமுகவைச் சேர்ந்த தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் சந்தித்தனர்.
சென்னையிலிருந்து திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டிற்கு காரில் வந்த இரு அமைச்சர்களும், உள்ளே சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அவருடன் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜிகே மணி உள்ளிட்டோரும் உள்ளனர்.
செய்தியாளர்கள், வெளிநபர்கள் அனுமதிக்கப்படவில்லை. தமிழகத்தில் கடந்த 2019 மக்களவைத் தேர்தலிலிருந்து, அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, தொடர்ந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட்டணியை தொடர்வதற்காக அதிமுக தரப்பில் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த வந்துள்ளதாக தெரிகிறது.
இதனிடையே பாமக தரப்பில், வன்னியர் சமூகத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 20 சதவீதம் உள் இடஒதுக்கீடு தொடர்பாக வைத்த கோரிக்கையை, சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அது தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது குறித்து தகவல் தெரிவித்து, கூட்டணியை உறுதிப்படுத்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்த வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 2021 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.