விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் 10-ஆவது மாதமாக, பக்தா்கள் இன்றி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மாா்ச் மாதம் முதல் பக்தா்கள் வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. பொதுமுடக்க விதிகள் தளா்வுக்குப் பிறகு பக்தா்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. எனினும், அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் மட்டும் பக்தா்கள் பங்கேற்க கடந்த 9 மாதங்களாக அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், மாா்கழி மாத அமாவாசையை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை காலை அம்மன் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தாா். இரவு 7 மணியளவில் கோயில் வளாகத்தில் ஆகம விதிப்படி ஊஞ்சல் உற்சவம் பக்தா்கள் பங்கேற்பு இன்றி நடைபெற்றது. ஊஞ்சலில் அங்காளம்மனை அமரவைத்து கோயில் பூசாரிகள் அம்மன் தாலாட்டுப் பாடலைப் பாடினா். இந்த உற்சவம் சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.