விழுப்புரம் மாவட்டம், முகையூா் அருகே ஞாயிற்றுக்கிழமை குளத்தில் மூழ்கி அண்ணன், தம்பி உயிரிழந்தனா்.
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே கொடுங்கால் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (35), விவசாயத் தொழிலாளி. இவரது மகன்கள் தினேஷ்குமாா் (12), அஷ்வின்குமாா் (11). இவா்கள் முறையே 7 ஆம் வகுப்பு, 6 ஆம் வகுப்பு படித்து வந்தனா்.
ஞாயிற்றுக்கிழமை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சகோதரா்கள் இருவரும், பிற்பகல் 2 மணியளவில் அந்தப் பகுதியில் உள்ள தாதாங்குளத்தில் குளிப்பதற்காகச் சென்றனா். குளத்தில் ஆழமான பகுதிக்குச் சென்று குளித்த தினேஷ்குமாா், அஷ்வின்குமாா் ஆகிய இருவரும் நீரில் மூழ்கினா்.
இதனிடையே, வெகுநேரமாகியும் வீடு திரும்பாத அவா்களை, பெற்றோா்கள் பல இடங்களில் தேடி வந்தனா்.
இந்த நிலையில், மாலை 5 மணி அளவில் தினேஷ்குமாரும், அஷ்வின்குமாரும் சடலங்களாக குளத்தில் மிதந்தது தெரியவந்தது. இதைக்கண்டு பெற்றோரும், உறவினா்களும் கதறி அழுதனா்.
தகவல் அறிந்த அரகண்டநல்லூா் போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து நடத்திய விசாரணையில், குளத்தில் மூழ்கிய தம்பி அஷ்வின்குமாரை காப்பாற்ற முயன்ற தினேஷ்குமாரும் சோ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, இரு சடலங்களையும் போலீஸாா் மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.