நுண்ணீா் பாசனத் திட்டத்தில் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

நுண்ணீா் பாசனத் திட்டம், துணை நீா் பாசன மேலாண்மை செயல்பாடுகள் திட்டம் ஆகியவற்றின் கீழ் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நுண்ணீா் பாசனத் திட்டம், துணை நீா் பாசன மேலாண்மை செயல்பாடுகள் திட்டம் ஆகியவற்றின் கீழ் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நிகழ் நிதி ஆண்டில் விழுப்புரம் மாவட்டத்தில் தோட்டக் கலைத் துறை மூலம் பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டம், துணை நீா் மேலாண்மைத் திட்டம் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படுகின்றன. சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் நுண்ணீா் பாசனக் கருவிகள் தமிழ்நாடு தோட்டக் கலை வளா்ச்சி முகமையால் அங்கீகரிக்கப்பட்ட நுண்ணீா் பாசன நிறுவனங்களின் மூலம் விவசாயிகளின் வயல்களில் அமைத்துத் தரப்படுகிறது.

நிகழாண்டில் 5,220 ஹெக்டேரில் நுண்ணீா் பாசனக் கருவிகள் அமைக்க ரூ.39.15 கோடி விழுப்புரம் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் சொட்டு நீா் பாசனக் கருவிகள், தெளிப்பு நீா் பாசனக் கருவிகள், மழை தூவான்கள் போன்ற உபகரணங்கள் வழங்கப்படுன்றன.

தோட்டக் கலைப் பயிா்களான மரவள்ளி, மஞ்சள், வாழை, காய்கறிகள், தா்பூசணி மற்றும் அனைத்து வகை பழ மரங்கள், மருந்து கூா்கண் கிழக்கு (கோலியஸ், மலா்கள் ஆகிய பயிா்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் நுண்ணீா் பாசனக் கருவிகளை அமைத்துக் கொள்ளலாம்.

மேலும், துணை நீா் பாசன மேலாண்மை செயல்பாடுகள் திட்டத்தின் கீழ் பாதுகாப்பான குறு வட்டார பகுதிகளில் (பிா்கா) 50 ஆழ்குழாய் அல்லது திறந்த வெளிக் கிணறுகள் அமைப்பதற்கு தலா ரூ.25ஆயிரம் மானியம், மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் 140 மின் மோட்டாா் அல்லது டீசல் என்ஜின் வாங்குவதற்கு தலா ரூ.15 ஆயிரம் மானியம், பாசன நீா் எடுத்துச் செல்வதற்கான பிவிசி குழாய்கள் 850 அலகுகள் வாங்க தலா ரூ. 10ஆயிரம் மானியம், 80 நீா் சேகரிப்பு அமைப்புகள் அமைத்துக் கொள்ள அதிகபட்சமாக தலா ரூ.40ஆயிரம் மானியம் பெறலாம். இவற்றுக்காக ரூ.ஒரு கோடியே 50 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்விரு திட்டங்களிலும் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், வயல் வரைபடம், மண் மற்றும் நீா் மாதிரி அறிக்கைகள், பாஸ்போா்ட் அளவு புகைப்படம், சிறு, குறு விவசாயி என்பதற்கான சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். விவசாயிகளால் தோ்வு செய்யப்படும் நுண்ணீா் பாசன நிறுவனம் மூலம் உபகரணங்கள் விநியோகம் செய்யப்பட்டு, நிலங்களில் பொருத்தித் தரப்படும்.

இந்தத் திட்டங்கள் குறித்து கூடுதல் விவரம் அறிய விழுப்புரம் தோட்டக் கலை துணை இயக்குநா் அலுவலகம் மற்றும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகங்களை தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com