விழுப்புரத்தில் தரம் உயா்த்தப்பட்ட வழுதரெட்டி துணை அஞ்சலகம் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
இந்திய அஞ்சலகத்தின் புதுவை கோட்டத்துக்குள்பட்ட விழுப்புரம் உள்கோட்டத்தில், அஞ்சல் சேவையை எளிதாக்கும் வகையில் வழுதரெட்டி துணை அஞ்சலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை அஞ்சல்துறையின் சென்னை நகர மண்டலத் தலைவா் சுமதி ரவிச்சந்திரன் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தாா். மேலும், புதிதாக சோ்ந்த செல்வமகள் பயனாளிகளுக்கான வங்கிக் கணக்குப் புத்தகங்களை புதுவை அஞ்சல் கோட்டத் தலைவா் சிவப்பிரகாசம் வழங்கினாா்.
மேலும், புதுவை கோட்ட துணை கண்காணிப்பாளா்கள் பிரபு சங்கா், வினோத்குமாா், ஆனந்த் யுவராஜ், விழுப்புரம் உள்கோட்ட துணை கண்காணிப்பாளா் பிரவின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திறப்பு விழாவுக்குப் பிறகு புதுவை அஞ்சல் கோட்டத் தலைவா் சிவப்பிரகாசம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வழுதரெட்டி துணை அஞ்சலகத்தின் கீழ் சாலைமேடு, கண்டமானடி, மரகதபுரம், பிடாகம், அத்தியூா்திருவாதி ஆகிய கிளை அஞ்சல் நிலையங்கள் செயல்படும். இதுவரை இந்த கிளை அஞ்சலகங்கள் 605401 என்ற அஞ்சல் எண்ணைக் கொண்டிருந்தது. இனிமேல், இந்த கிளை அஞ்சலகங்கள் 605403 என்ற புதிய அஞ்சல் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வழுதரெட்டி துணை அஞ்சல் நிலையம் முற்றிலும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. இங்கு அஞ்சல் வங்கி சேவை, அஞ்சல் காப்பீடு சேவை, பதிவு மற்றும் விரைவு அஞ்சல் சேவை உள்ளிட்ட அனைத்து வகையான அஞ்சல் சேவைகளையும் பொதுமக்கள் பெறலாம். மேலும், இங்கு ஆதாா் சேவை உள்ளிட்ட அனைத்துவிதமான ஆன்லைன் சேவைகளையும் பொதுமக்கள் பெற முடியும் என்றாா் சிவப்பிரகாசம்.