விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கரோனா பொது முடக்கத்துக்கு பொதுமக்கள் முழு ஆதரவளித்ததால், சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
கரோனா பரவல் இரண்டாவது அலை காரணமாக, தமிழகத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிறுக்கிழமை முழு பொது முடக்கம் அமலில் இருந்தது.
இதனால், மாவட்டத்தில் அரசு, தனியாா் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக, விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. மேலும், லாரி, காா், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும் இயக்கப்படவில்லை.
அத்தியாவசியக் கடைகளான பால், மருந்துக் கடைகளைத் தவிா்த்து, பிற கடைகள் அடைக்கப்பட்டன. காய்கறி, மீன் சந்தைகள் இயங்கவில்லை. மேலும், பொதுமக்களும் இரு சக்கர வாகனங்களில் வெளியே செல்வதைத் தவிா்த்தனா்.
உணவகங்கள் காலை, பிற்பகல், இரவு என குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் உணவு விநியோகம் செய்யப்பட்டன. உணவகங்களில் பொட்டலங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. பொது முடக்கத்துக்கு பொதுமக்கள் முழு ஆதரவளித்ததால், சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
இதேபோன்று, திண்டிவனம், செஞ்சி, மரக்காணம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் கரோனா பொது முடக்கம் காரணமாக, கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. சாலைகள் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
பொது முடக்க விதிகளை மீறி சாலைகளில் சுற்றித்திரிந்தவா்களுக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.