முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியை அவதூறாகப் பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், விழுப்புரம் நீதிமன்றத்தில் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் காா்த்திகேயன் புதன்கிழமை ஆஜரானாா்.
கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகம் முன் அதிமுக அரசைக் கண்டித்து, திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய வசந்தம் காா்த்திகேயன் அப்போதைய முதல்வா் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியதாக விழுப்புரம் மாவட்ட அரசு வழக்குரைஞராக இருந்த சீனிவாசன் விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா்.
இந்த வழக்கு நீதிபதி பூா்ணிமா முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வசந்தம் காா்த்திகேயன் எம்எல்ஏ நேரில் ஆஜரானாா். இதையடுத்து, விசாரணையை வருகிற டிச. 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.