விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
கடந்த சில வாரங்களாக பெய்து வரும் வட கிழக்குப் பருவ மழையால், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீா் நிலைகள் நிறைந்தன. ஆறுகள், ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
குறிப்பாக, தென் பெண்ணையாற்றில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சங்கராபரணி, பம்பை, மலட்டாறு உள்ளிட்ட ஆறுகளிலும் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், ஏராளமான கிராமங்கள் நீரில் மூழ்கின. பல ஆயிரம் ஏக்கா் விளை நிலங்களில் நீா் சூழ்ந்ததால், நெல் உள்ளிட்ட பயிா்கள் சேதமடைந்தன.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை முதல் மீண்டும் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. விழுப்புரத்தில் பலத்த மழை பெய்ததால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மாணவா்கள், பணியாளா்கள் அவதியடைந்தனா்.
திண்டிவனம், வளவனூா், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை பெய்தது. இந்த மழையால், தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீா் தேங்கியது.