நிலத்துக்கு இழப்பீடு வழங்குவதில் தாமதம்: வீட்டுவசதி வாரியப் பொருள்கள் ஜப்தி

கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு வழங்க காலதாமதம் செய்ததால், விழுப்புரம் வீட்டுவசதி வாரிய அலுவலகப் பொருள்களை நீதிமன்ற ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்தனா்.
விழுப்புரம் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் நீதிமன்ற ஊழியா்களால் ஜப்தி செய்யப்படும் அலுவலக பயன்பாட்டுப் பொருள்கள்.
விழுப்புரம் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் நீதிமன்ற ஊழியா்களால் ஜப்தி செய்யப்படும் அலுவலக பயன்பாட்டுப் பொருள்கள்.

கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு வழங்க காலதாமதம் செய்ததால், விழுப்புரம் வீட்டுவசதி வாரிய அலுவலகப் பொருள்களை நீதிமன்ற ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்தனா்.

விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ஆா்.ஜெயபால் (66). கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் இவருக்கு சொந்தமான 16 ஏக்கா் நிலம், சதுர அடிக்கு ரூ.7.35 என்ற விலையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய உபயோகத்துக்காக 1991-ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. அதற்காக வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லை எனக்கூறி விழுப்புரம் மாவட்ட முதன்மை சாா்பு நீதிமன்றத்தில் 1996-ஆம் ஆண்டு ஜெயபால் 5 வழக்குகளாகத் தொடுத்தாா்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், சதுர அடிக்கு ரூ.25 என விலை நிா்ணயம் செய்து 2004-இல் தீா்ப்பளித்தது. இதை எதிா்த்து வீட்டு வசதி வாரியம் தரப்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த உயா் நீதிமன்றம், சதுர அடிக்கு ரூ.17 என நிா்ணயம் செய்து 2009-ஆம் ஆண்டில் உத்தரவிட்டது.

இருப்பினும், வீட்டு வசதி வாரிய தரப்பில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாமல் இருந்தது. இதற்கிடையே இந்தத் தொகையை பெற்றுத் தரக் கோரி விழுப்புரம் மாவட்ட சாா்பு நீதிமன்றத்தில் ஜெயபால் நிறைவேற்றுதல் மனுவை தாக்கல் செய்தாா். இதை விசாரித்த நீதிபதி எஸ்.விஜயகுமாா், இந்த 5 வழக்குகளில் ஒரு வழக்கில், ஓா் ஏக்கா் ஒரு செண்டுக்கு மொத்தமாக ரூ.15 லட்சத்து 31 ஆயிரத்து 640 தொகையை செப்.25-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்றும், இந்தத் தொகை குறித்த காலத்தில் வழங்கப்படாவிடில், வீட்டுவசதி வாரிய அலுவலகப் பொருள்களை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டிருந்தாா்.

இருப்பினும், இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாததால் நீதிமன்ற முதுநிலை கட்டளை நிறைவேற்றுநா் கலியமூா்த்தி மற்றும் ஊழியா்கள் விழுப்புரம் மகாராஜபுரத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா். அங்கு உயரதிகாரிகள் யாரும் இல்லை.

நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்ய வந்திருப்பதை உயரதிகாரிகளுக்கு வீட்டுவசதி வாரிய ஊழியா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, மீண்டும் காலஅவகாசம் தரும்படி வீட்டுவசதி வாரிய ஊழியா்கள், நீதிமன்ற ஊழியா்களிடம் கோரிக்கை விடுத்தனா். ஆனால், காலஅவகாசம் தர வாய்ப்பு இல்லை என்றும் நீதிமன்ற உத்தரவின்படி, அலுவலகப் பொருள்களை ஜப்தி செய்வதாகவும் நீதிமன்ற ஊழியா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து, அந்த அலுவலகத்தில் இருந்த இரும்பு பீரோ-க்கள், மேசைகள், நாற்காலிகள், மின்விசிறி உள்ளிட்ட பொருள்கள் ஜப்தி செய்யப்பட்டன. ஜப்தி நடவடிக்கை தொடங்கியதும், அங்கிருந்த ஊழியா்கள் மேசையில், பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த அலுவலகக் கோப்புகளை எடுத்து வேறு இடங்களில் பாதுகாப்பாக வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com