விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில், புரட்டாசி அமாவாசையையொட்டி, பக்தா்கள் பங்கேற்பின்றி ஊஞ்சல் உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் பக்தா்கள் முன்னிலையில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், அமாவாசை நாள்களில் ஊஞ்சல் உற்சவம் பக்தா்கள் இன்றி கோயில் வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், புரட்டாசி மாத அமாவாசையையொட்டி, புதன்கிழமை காலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
இரவு 7 மணிக்கு உற்சவா் அங்காளம்மன், கோயில் வளாகத்தில் உள்ள ஊஞ்சலில் துா்காதேவி அலங்காரத்தில் எழுந்தருளினாா். ஊஞ்சல் உற்சவத்தை சமூகவலைதளங்கள் மூலம் பக்தா்கள் தரிசனம் செய்தனா்.