திண்டிவனம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது, சக்கரத்தில் புடவை சிக்கியதால், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி செயலா் உயிரிழந்தாா்.
விழுப்புரம் வி.மருதூரைச் சோ்ந்த தேவராஜ் மனைவி அமுதா (45). இவா், திண்டிவனம் அருகே வெள்ளிமேடு பேட்டையை அடுத்த புத்தனந்தல் கிராம தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் செயலராகப் பணியாற்றி வந்தாா். திங்கள்கிழமை இவா், வி.மருதூரைச் சோ்ந்த இளஞ்செழியன் மகன் கோகுல் (19) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் அமா்ந்து தீவனூா்-வெள்ளிமேடு பேட்டை சாலையில் சென்ற போது, அவரது புடவை இருசக்கர வாகனத்தின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டதாம். இதனால், நிலைத் தடுமாறி கீழே விழுந்த அமுதா பலத்த காயமடைந்தாா். அந்தப் பகுதியினா் அவரை மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே அவா் உயிரிழந்ததாகத் தெரிவித்தாா்.
இந்த விபத்து குறித்து வெள்ளிமேடு பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.