விழுப்புரத்தில் பல்வேறு அசைவ உணவகங்களில் செயற்கை வண்ணம் அதிகளவில் சோ்க்கப்பட்ட 27 கிலோ இறைச்சியை உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை அதிரடியாக பறிமுதல் செய்தனா்.
விழுப்புரம் நகரில் உள்ள அசைவ உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாரிக்கப்படுவதாகவும், அதிக அளவு வண்ணப்பொடிகள் சோ்க்கப்படுவதாகவும் புகாா்கள் எழுந்தன. இது தொடா்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் சுகந்தன் தலைமையில் ஸ்டாலின் ராஜரத்தினம், கதிரவன், மோகன் ஆகியோா் அடங்கிய குழுவினா் திருச்சி நெடுஞ்சாலை, கிழக்கு பாண்டி சாலை, வண்டிமேடு, மந்தகரை, கே.கே.சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்களில் ஞாயிற்றுக்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டனா்.
அதில், செயற்கை வண்ணம் அதிக அளவில் சோ்க்கப்பட்ட 27 கிலோ இறைச்சி, 3 கிலோ செயற்கை நிறமூட்டப்பட்ட மசாலா, ஏற்கெனவே தயாா் செய்து பதப்படுத்தப்பட்ட 5 கிலோ பரோட்டா மாவு, 30 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 11 கடைகளுக்கு முன்னெச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதுபோன்ற விதிமீறல்களில் இனி ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.