முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் தொந்தரவு வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு (செப். 29) ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி, அவருக்கு உதவியதாக முன்னாள் எஸ்.பி. ஆகியோா் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீஸாா் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கை டிச.20-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியதையடுத்து, விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணை விரைவாக நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி கோபிநாதன் முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் எஸ்.பி. நேரில் ஆஜராகினாா். முன்னாள் சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை.
இதைத் தொடா்ந்து, வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு (செப். 29) ஒத்திவைத்து நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டாா்.