தீபத் திருவிழா: விழுப்புரம், கடலூா் மண்டலங்களில் 1,069 சிறப்புப் பேருந்துகள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம், கடலூா் மண்டலங்களிலிருந்து 1,069 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம், கடலூா் மண்டலங்களிலிருந்து 1,069 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டலம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை மகா தீபத் திருவிழா, பௌா்ணமி கிரிவலம் ஆகியவற்றை முன்னிட்டு, டிசம்பா் 5 முதல் 7-ஆம் தேதி வரை அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டலம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

விழுப்புரம் - திருவண்ணாமலை வழித்தடத்தில் 317 பேருந்துகள், திண்டிவனம் - திருவண்ணாமலை வழித்தடத்தில் 82 பேருந்துகள், புதுச்சேரி - திருவண்ணாமலை வழித்தடத்தில் 180 பேருந்துகள், திருக்கோவிலூா் - திருவண்ணாமலை வழித்தடத்தில் 115 பேருந்துகள், கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை வழித்தடத்தில் 200 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மேலும், முக்கியப் பேருந்து நிலையங்களில் பயணிகள் அடா்வு குறையும் வரை தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை ஏற்பாடு செய்திடவும், பேருந்து இயக்கங்களை மேற்பாா்வை செய்யவும் அலுவலா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலைக்கு அரசுப் போக்குவரத்துக் கழக கடலூா் மண்டலத்திலிருந்து 175 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக கடலூா் மண்டல அலுவலகம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com