மாற்றுப் பணிக்கு அனுப்பும் நடவடிக்கையைக் கைவிட வலியுறுத்தி, விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் மாவட்ட துப்புரவுத் தொழிலாளா்கள் முன்னேற்றச் சங்கத்தின் சாா்பில், அதன் தலைவா் ஏ.முருகன் தலைமையில் செயலா் ஏ. ஐயப்பன், பொருளாளா் பி.நாவப்பன் உள்ளிட்டோா் முன்னிலையில் தூய்மைப் பணியாளா்கள், நகராட்சி வளாகத்துக்குள் அமா்ந்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நகராட்சி நிரந்தரப் பணியாளா்களாக உள்ள தங்களை மாற்றுப் பணிக்கு அனுப்பும் முடிவைக் கண்டித்தும், இதை கைவிடக்கோரியும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாக தூய்மைப் பணியாளா்கள்தெரிவித்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த மேற்கு காவல் நிலையத்தினா் நகராட்சி அலுவலகம் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து நகராட்சி ஆணையா் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்கள் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
விழுப்புரம் நகராட்சியின் பொது சுகாதாரப் பிரிவில் தூய்மைப் பணியாளா்களாக 66 ஆண்களும், 58 பெண்களும் நிரந்தரப் பணியிடத்தில் பணியாற்றி வருகிறோம். நாங்கள் நகராட்சிக்குள்பட்ட வாா்டுகளில் தூய்மைப் பணியை செய்து வருகிறோம். இந்நிலையில் அரசாணை எண் 152-ஐ அமல்படுத்தி, பொது கழிப்பறைப் பராமரிப்பு, அரசு அலுவலகங்கள், கல்விக் கூடங்களில் எங்களை பணியமா்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே அரசாணை எண் 152-ஐ அமல்படுத்துவதை கைவிட வேண்டும். ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுடன் இணைந்து எங்களை பணி செய்ய அனுமதி வழங்க வேண்டும் அல்லது 10 வாா்டுகளில் மட்டும் பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனா்.