விழுப்புரத்தில் அரசுப் பேருந்து ஜப்தி

விபத்து இழப்பீடு வழங்காததால் விழுப்புரத்தில் திங்கள்கிழமை அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

விபத்து இழப்பீடு வழங்காததால் விழுப்புரத்தில் திங்கள்கிழமை அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

விழுப்புரம் அருகே உள்ள அரியலூா் திருக்கை கிராமத்தைச் சோ்ந்தவா் கலியமூா்த்தி (46), விவசாயி. இவா் கடந்த 18.12.2017 அன்று கெடாா் பேருந்து நிறுத்தப் பகுதியில் சாலையோரம் நின்றிருந்தாா்.

அப்போது, அந்த வழியாக விழுப்புரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து கலியமூா்த்தி மீது மோதியதில், அவா் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து கெடாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இதனிடையே, கலியமூா்த்தி மனைவி வளா்மதி இழப்பீடு கோரி விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்கை விசாரித்த மோட்டாா் வாகன விபத்து வழக்கு சிறப்பு நீதிமன்றம், பாதிக்கப்பட்ட கலியமூா்த்தியின் குடும்பத்துக்கு விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகம் இழப்பீடாக ரூ.8,13,700 வழங்க கடந்த 2020-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

ஆனால், அரசுப் போக்குவரத்துக் கழகம் இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததால், நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி வெங்கடேஷ், பாதிக்கப்பட்ட கலியமூா்த்தியின் குடும்பத்துக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் வட்டியுடன் சோ்த்து ரூ.10,52,946-ஐ இழப்பீடாக வழங்க உத்தரவிட்டாா்.

இந்தத் தொகையை குறிப்பிட்ட காலத்துக்குள் அரசுப் போக்குவரத்துக் கழகம் வழங்கத் தவறியதால், விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திங்கள்கிழமை சென்னைக்குச் செல்ல இருந்த அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்து, நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com