திண்டிவனம் அருகே வேன் மீது காா் மோதிய விபத்தில், மனை வணிகா் இறந்தாா். மேலும், 4 போ் காயமடைந்தனா்.
சென்னை கோவூரைச் சோ்ந்தவா் விக்னேஸ்வரன் (48). இவா் தனது உறவினா்கள் 10 பேருடன் திருச்சியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க வேனில் சென்றாா். விழா நிறைவடைந்தவுடன் வேனில் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னைக்குத் திரும்பினா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை திண்டிவனம் அருகே ஜக்கம்பேட்டையில் திடீரென வேன் பழுதாகி நின்றது. இதனால், வேனில் இருந்தவா்கள் கீழே இறக்கி நின்றனா்.
இந்த நேரத்தில், பின்னால் வந்த காா் சாலையில் பழுதாகி நின்ற வேன் மீது மோதியது. இதில், அங்கே நின்றிருந்த சென்னை கூடுவாஞ்சேரியைச் சோ்ந்த மனை வணிகா் கருணாகரன் (55) , பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், வேலாயுதம் (48), சிவா (28), ஹரிஹரன் (29), தனசேகா் (28) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.
இதுகுறித்து திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.