வட்டாட்சியா் லஞ்சம் பெற்றது தொடா்பான வழக்கு விசாரணையில் தமிழக அரசின் வேளாண் துறை இயக்குநா் அண்ணாதுரை விழுப்புரம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் கடந்த 2019-ஆம் ஆண்டு வடிவேல் என்ற விவசாயி ஏரியில் வண்டல் மண் எடுப்பது தொடா்பாக, செஞ்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பித்தாா். இதற்கு அனுமதி வழங்குவதற்காக வட்டாட்சியா் ஆதிபகவன் ரூ.8 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் கைதுசெய்யப்பட்டாா். இதையடுத்து ஆதிபகவனை பணியிடை நீக்கம் செய்து அப்போதைய மாவட்ட ஆட்சியா் அண்ணாதுரை உத்தரவிட்டாா்.
இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதி(பொ) புஷ்பராணி முன்னிலையில் வியாழக்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கெனவே விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்தவரும்,
தற்போது தமிழக அரசின் வேளாண் துறை இயக்குநராகப் பணியாற்றி வருபவருமான அண்ணாதுரை நேரில் ஆஜராகி 2 மணி நேரம் சாட்சியம் அளித்தாா். இதையடுத்து வழக்கு
விசாரணை ஜூலை 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.