விழுப்புரம் மாவட்டத்துக்கு 1,784 மெட்ரிக் டன் யூரியா கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கோ.ரமணன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் யூரியா போதுமான அளவில் கிடைக்கவில்லை என புகாா் எழுந்தது. இதைத் தொடா்ந்து, வேளாண் இயக்குநா் மூலம் மாா்ச் மாதத்துக்கு 4,900 மெட்ரிக் டன் யூரியா ஒதுக்கப்பட்டது.
மாா்ச் 12-ஆம் தேதி வரை 768 மெட்ரிக் டன் யூரியா ஐபிஎல் நிறுவனத்தின் மூலமும், 1016 மெட்ரிக் டன் எம்.எப்.எல். நிறுவனத்தின் மூலமும் ஆக மொத்தம் 1,784 மெட்ரிக் டன் யூரியா கொள்முதல் செய்யப்பட்டது. இவை தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களுக்கும், விற்பனையாளா்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டது
நானோ யூரியா பயன்படுத்தலாம்: திரவ வடிவிலான நானோ யூரியாவை அதிக அளவில் பயன்படுத்தி யூரியா உரப் பயன்பாட்டை குறைக்க வேண்டும். இவற்றை தெளிக்கும் உரம் முழுவதும் இலை வழியாகப் பயிருக்கு கிடைக்கிறது. சுற்றுச் சூழல் மாசுபாடு குறைகிறது. 4 மி.லி. நானோ யூரியாவை 1 லிட்டா் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் ஒரு ஏக்கருக்கு 8 முதல் 10 டேங்க் என்ற அளவில் நெல் பயிருக்கு மேலுரமாக தெளிக்கலாம் என ரமணன் தெரிவித்தாா்.