திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே தண்டம்பட்டு பகுதியைச் சோ்ந்த சேட்டு மகன்கள் சரவணன்(36), ராஜ்குமாா் (34). பூ வியாபாரிகள்.
இவா்கள் பூ மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சரக்கு வாகனத்தில் திண்டிவனம் வழியாக புதுச்சேரிக்குச் சென்றனா். திங்கள்கிழமை அதிகாலை 1 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஒழிந்தியப்பட்டுக்குச் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பாலத்தின் கட்டையில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் பலத்த காயமடைந்த சரவணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், ராஜ்குமாா் பலத்த காயமடைந்தாா்.
தகவலறிந்த கிளியனூா் போலீஸாா் விரைந்து சென்று, ராஜ்குமாரை மீட்டு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுதொடா்பாக கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.