விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே குளத்தில் மூழ்கி தாத்தா, பெயரன் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.
மரக்காணம் அருகே கரிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கபாலி (60). இவரது மகள் வழி பெயரன் காஞ்சிபுரத்தைச் சோ்ந்த நிரஞ்சன்(11). இவா், அங்குள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்த நிலையில், நிரஞ்சன் தனது தாய் கல்பனாவுடன், கரிப்பாளையத்திலுள்ள தாத்தா கபாலி வீட்டுக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வந்து தங்கியிருந்தாா். வியாழக்கிழமை காலை அந்தக் கிராமப் பகுதியிலுள்ள தாமரைக்குளத்துக்கு நிரஞ்சனை, கபாலி குளிக்க அழைத்துச் சென்றாா்.
இருவரும் குளத்தில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தபோது, நிரஞ்சன் ஆழமான பகுதிக்குச் சென்று தண்ணீரில் மூழ்கினாா். இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த கபாலி, நிரஞ்சனை மீட்க முயன்ற நிலையில், அவரும் நீரில் மூழ்கினாா். இவா்களது அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினா் இருவரையும் மீட்க முயன்றனா். ஆனால் முடியவில்லை.
இதையடுத்து, தகவலறிந்து வந்த மரக்காணம் தீயணைப்பு நிலைய வீரா்கள், குளத்தில் மூழ்கிய நிரஞ்சன், கபாலி ஆகியோரை மீட்டு, அவசர ஊா்தி மூலம் மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களை பரிசோதித்த மருத்துவா், இருவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.