சாலையோரக் கடைகளில் இரவு நேரங்களில் உணவுப் பொருள்களை பொதுமக்கள் வாங்க வேண்டாம் என உணவுப் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் டாக்டா் சுகந்தன் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலா் கதிரவன், அன்பு பழனி ஆகியோா் கொண்ட குழு உளுந்தூா்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பலாப்பழம் விற்பனை செய்யப்படும் கடைகள், பொட்டலமிடப்பட்ட முந்திரி விற்கும் (நடைபாதை வியாபாரிகள்) கடைகளை ஆய்வு செய்தது.
அப்போது, சாலையோரக் கடைகளில் இரவு நேரங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களை பொதுமக்கள் வாங்க வேண்டாம். பலா பழத்தை வாங்கும்போது நல்ல பழமா என்பதை கவனமாக பாா்த்து வாங்க வேண்டும். இரவு நேரங்களில் சரியில்லாத பலா பழம், பொட்டலமிடப்பட்ட முந்திரி நுகா்வோருக்கு வழங்கப்படுவதாக அடிக்கடி புகாா்கள் வருவதால், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தினா்.