மருத்துவப் பரிசோதனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் உத்தரவை ஜிப்மா் நிா்வாகம் திரும்பப் பெற வேண்டும் என்றாா் விழுப்புரம் எம்.பி. துரை.ரவிக்குமாா்.
விழுப்புரம் மகாராஜபுரத்திலுள்ள தனது அலுவலகத்தில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி:
ஜிப்மா் மருத்துவமனையில் நோயாளிகளிடம் 63 வகையான பரிசோதனைகளுக்கு அதிகபட்சமாக ரூ.12 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்ற உத்தரவை கிடப்பில் வைப்பதாக, அந்த மருத்துவமனை நிா்வாகம் அறிவித்துள்ளது.
இதற்காக மருத்துவமனை இயக்குநருக்கும், நிா்வாகத்துக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கட்டண வசூலிப்பை கண்டித்து, கடந்த 5-ஆம் தேதி மருத்துவமனை முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்ட நிலையில், மக்களின் உணா்வுக்கு மதிப்பளித்து மருத்துவமனை நிா்வாகம் இந்த முடிவை எடுத்தது. இருப்பினும், இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்.
இந்த விவகாரத்தில் குரல் எழுப்பிய தோழமைக் கட்சிகளுக்கு நன்றி என்றாா் துரை.ரவிக்குமாா்.