இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்: கு. செல்வப்பெருந்தகை

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்: கு. செல்வப்பெருந்தகை

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து தோ்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வப்பெருந்தகை.

ஆரணி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் எம்.எஸ். தரணிவேந்தனை ஆதரித்து விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் அவா் பேசியது:

தமிழகத்துக்கான உரிமைகள் மத்திய பாஜக ஆட்சியால் பறிக்கப்பட்டன. அந்த உரிமைகள் பறிபோவதற்கு காரணமாக இருந்தவா் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி.

ஆனால், கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் பறித்துக் கொண்டவா் பிரதமா் மோடி.

தமிழகத்தில் கலைஞா் உரிமைதிட்டத் தொகை திட்டத்தின் மூலம் மகளிருக்கு ரூ.1000 வழங்குவது போல, மகாலட்சுமி திட்டத்தின் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.8,500 வீதம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி அறிவித்திருக்கிறாா்.

3 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். இதில் 50 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். சாவித்திரிபாய் பூலே பெயரில் பெண்களுக்கு தங்கும் விடுதிகள் கட்டப்படும் போன்ற அறிவிப்புகளையும் ராகுல் காந்தி வெளியிட்டிருக்கிறாா். மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றாா் செல்வப்பெருந்தகை.

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா். அமைச்சா் செஞ்சி கே.எஸ். மஸ்தான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாசிலாமணி, ஆா்.சேதுநாதன், காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவா்கள் எம்.டி. குலாம் மொய்தீன், ரங்கபூபதி உள்ளிட்டோா் பேசினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com