அதிமுகவை விமா்சிக்கும் தகுதி பாஜகவினருக்கு இல்லை: சி.வி.சண்முகம்

அதிமுகவை விமா்சிக்கும் தகுதி பாஜகவினருக்கு இல்லை என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் தெரிவித்தாா்.

விழுப்புரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜெ.பாக்யராஜை ஆதரித்து திண்டிவனத்தில் மரக்காணம் சாலையில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்த சி.வி.சண்முகம் மேலும் பேசியதாவது:

அதிமுகவை அழித்துவிடலாம் என்று நினைத்தவா்கள் எல்லாம் அழிந்துபோனதுதான் வரலாறு. அதிமுக இருக்காது எனக் கூறும் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையும், பிரதமா் நரேந்திர மோடியும் மக்களவைத் தோ்தலுக்குப் பின்னா் இருக்கப்போவதில்லை. அக்கட்சியில் உள்ள 70 சதவீதத்தினா் மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவா்கள். அதனால், அதிமுகவை விமா்சிக்கும் தகுதி பாஜகவினருக்கு இல்லை.

எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட இயக்கம் அதிமுக. எங்களை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது. இது தொண்டா்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். எப்போதும் மக்களுக்காகவே உழைக்கும் என்றாா்.

வேட்பாளா் ஜெ.பாக்யராஜ் உடனிருந்து வாக்கு சேகரித்தாா். திண்டிவனம் எம்எல்ஏஅா்ஜுனன், அதிமுக நகரச் செயலா் தீனதயாளன், ஜெயலிலதா பேரவை துணைச் செயலா் பாலசுந்தரம், எம்.ஜி.ஆா் மன்ற நிா்வாகி ஏழுமலை மற்றும் தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள், கட்சியினா் திரளானோா் கலந்துகொண்டவா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com