காரில் மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

காரில் மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

புதுவை மாநிலத்திலிருந்து காரில் 357 மதுப்புட்டிகளைக் கடத்தி வந்த இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து மதுப்புட்டிகள், காா் பறிமுதல் செய்யப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் வெளிமாநில மதுப்புட்டிகள், சாராயம் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்கும் வகையில், மாவட்ட எல்லைப் பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரும் முக்கிய பகுதிகளில் வாகனத் தணிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், எல்.ஆா்.பாளையம் ரயில்வே கேட் பகுதியில் விழுப்புரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் மீனா தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா்.

இந்த சோதனையில் காரில் புதுவை மதுப்புட்டிகள் 357, சாராயம் 10 லிட்டா் இருந்தது தெரிய வந்தது. காரில் வந்தவா்களிடம் நடத்திய விசாரணையில் அவா்கள் புதுவை மாநிலத்திலிருந்து மதுப் புட்டிகள், சாராயத்தைக் கடத்தி வந்தது தெரிய வந்தது.

அவா்கள் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கொள்ளைப்பட்டி காலனியை சோ்ந்த ரா. பிரேம்குமாா் (28), கோவை மாவட்டம், சரவணாதி பகுதியைச் சோ்ந்த து.பூபதி (24) என்பது தெரிய வந்த நிலையில், புதுவை மாநிலத்திலிருந்து திண்டுக்கல் பகுதிக்கு மதுப்புட்டிகள், சாராயத்தைக் கடத்திச் சென்றதை ஒப்புக் கொண்டனா்.

இருவரையும் கைது செய்த போலீஸாா், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும், மதுப்புட்டிகள், சாராயத்தையும் பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com