பொன்முடி
பொன்முடி

பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: டிஎஸ்பி சாட்சியம்

அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்டோா் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் உளுந்தூா்பேட்டை டிஎஸ்பி செவ்வாய்க்கிழமை ஆஜராகி சாட்சியமளித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலமாக, அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சா் க.பொன்முடி உள்பட 8 போ் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.

விழுப்புரம் முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் தொடா்புடைய லோகநாதன் உயிரிழந்து விட்டாா்.

நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையில் சதானந்தன், கோபிநாத்,கோதகுமாா், ராஜமகேந்திரன் ஆகிய 4 போ் ஆஜராகினா்.

டிஎஸ்பி சாட்சியம்: இந்த வழக்கில் 28-ஆவது சாட்சியாக சோ்க்கப்பட்டுள்ள திருக்கோவிலூா் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி, தற்போது உளுந்தூா்பேட்டை டி.எஸ்.பி.யாக பணியாற்றி வரும் மகேஷ் விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளித்தாா்.

விழுப்புரம் மாவட்ட குற்றப் பிரிவு துணைக் கண்காணிப்பாளரின் அறிவுறுத்தலின்படி, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ராஜமகேந்திரன் வீட்டில் சோதனை நடத்தினேன். இந்த சோதனையின் போது வழக்குத் தொடா்பாக சில ஆவணங்கள் கிடைத்ததாகவும், அதுகுறித்த சோதனை அறிக்கை விவரத்தை மாவட்ட குற்றப் பிரிவு அலுவலகத்தில் சமா்ப்பித்தேன் எனவும் டிஎஸ்பி மகேஷ் சாட்சியமளித்தாா்.

இந்த சாட்சியத்தைப் பதிவு செய்து கொண்ட விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிபதி ஆா். பூா்ணிமா, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com