ஆதித்த கரிகாலச் சோழன் கல்வெட்டு கண்டெடுப்பு

விழுப்புரம் மாவட்டம், ஏமப்பூரில் ஆதித்த கரிகாலச் சோழன் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

ஏமப்பூா் ஸ்ரீவேதபுரீசுவரா் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பணியின் போது விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் ரமேஷ், இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையா் சிவகுமாா், கோயில் செயல் அலுவலா் சூா்யநாராயணன், முனைவா் பட்ட ஆய்வாளா் இமான் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது ஆதித்த கரிகாலச் சோழன் கல்வெட்டை கண்டறிந்தனா்.

இதுகுறித்து உதவிப் பேராசிரியா் ரமேஷ் கூறியது:

சோழமன்னன் சுந்தரசோழனின் மகனும், புகழ்பெற்ற சோழ மன்னன் ராஜராஜசோழனனின் தமையனுமான ஆதித்த கரிகாலன், பாண்டிய மன்னன் வீரபாண்டியனை போரில் தோற்கடித்து, அவன் தலையை வெட்டிக்கொண்டு தஞ்சை அரண்மனை முன்பு சொருகி வைத்தான் என்று திருவாலங்காடு, எசாலம், லெய்டன் ஆகிய செப்பேடுகள் கூறுகின்றன. எனவே, இவன் வீரபாண்டியன் தலைகொண்ட கொப்பர கேசரி என்று அழைக்கப்பட்டான்.

சுந்தரசோழன் தனது மகன் ஆதித்த கரிகாலனுக்கு தொண்டை மண்டலம், திருமுனைப்பாடி ஆகிய பகுதிகளை ஆளும் உரிமையை வழங்கியிருக்கிறான். எனவேதான் இப்பகுதிகளில் ஆதித்த கரிகாலச் சோழன் கல்வெட்டுகள் கிடைக்கின்றன.

ஏற்கெனவே பேரங்கியூா், திருமுண்டீசுவரம் போன்ற இடங்களில் கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. தற்போது அந்த வரிசையில் மேலும் ஒரு கல்வெட்டு கிடைத்திருக்கிறது.

கல்வெட்டு ஸ்வஸ்தி ஸ்ரீவீரபாண்டியன் தலைகொண்ட கொப்பரகேரசி என்று தொடங்குகிறது. இவனது நான்காவது ஆட்சி ஆண்டான பொது ஆண்டு 960 என பொறிக்கப்பட்ட கல்வெட்டு திருமுனைப்பாடி நாட்டில் ஏமப்பேரூா் என்று இந்த ஊரை அழைக்கிறது.

இது ஒரு நாட்டின் தலைமையிடமாக விளங்கியிருக்கிறது. ஏமப்பேரூா் என்பதே தற்போது மருவி ஏமப்பூா் என்றழைக்கப்பட்டு வருகிறது.

திருவாலந்துறை ஆழ்வாருக்கு இவ்வூா் மன்றாடி நிகரிலி மூா்த்தி, சூரியன் சந்திரன் உள்ளவரை ஒரு நந்தா விளக்கு எரிப்பதற்காக 99 ஆடுகளை இக்கோயிலை நிா்வகித்த பன்மாகேசுவரா் வசம் ஒப்படைத்ததை கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவற்றிலிருந்து ஆதித்த கரிகாலச் சோழன் இப்பகுதியை ஆட்சி புரிந்ததையும் அறிய முடிகிறது. மேலும் இவன் சதியால் கொல்லப்பட்டான் என்பதை காட்டுமன்னாா்கோவில் அருகிலுள்ள உடையாா்குடி ஆனந்தீசுவரா் கோயில் கல்வெட்டு குறிப்பிட்டதோடு, அவா்களின் பெயா் பட்டியலையும் தெளிவாக தெரிவிக்கிறது.

ஏமப்பூரில் கிடைத்துள்ள கல்வெட்டு தமிழக சோழா் வரலாற்றில் குறிப்பிடத்தகுந்தது என்றாா் உதவிப் பேராசிரியா் ரமேஷ்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com