விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளைக் கொண்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் இரு சட்டப் பேரவைத் தொகுதிகளின் 8 கண்காணிப்பு கேமராக்கள் புதன்கிழமை காலை செயலிழந்தன.
இந்த வளாகம் முன்பக்க கட்டடத்தின் கீழ் தளத்தில் விழுப்புரம் தொகுதிக்கும், பின்புறக் கட்டடத்தின்மேல் தளத்தில் திண்டிவனம் தொகுதிக்கும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், புதன்கிழமை காலை இடியுடன் மழை பெய்த நிலையில் காலை 7.28 மணி முதல் 8.10 மணி வரை 8 கேமராக்கள் செயலிழந்தன.
இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலரும் - ஆட்சியருமான சி.பழனி கவனத்துக்கு தகவல் கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து செயலிழந்த கேமராக்கள் சரி செய்யப்பட்டன.
வேட்பாளர் நேரில் ஆய்வு
இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் விசிக வேட்பாளர் துரை ரவிக்குமார் வாக்கு எண்ணிக்கை மையமான அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரிக்கு விரைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களிடம் நடந்த நிகழ்வு குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் கூறியது,
இடி தாக்கியதால் 8 கண்காணிப்பு செயலிழந்து விட்டன. பதிவு மட்டும் 2 நிமிஷம் இயங்கவில்லை எனத் தெரிவித்தனர். இரண்டாவது முறையாக கேமராக்கள் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். உடனடி நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.
கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதில் முன் அனுபவம் இல்லாத நிறுவனத்தினர் இங்கு கேமராக்களை பொருத்தும் பணியை மேற்கொண்டு இருக்கின்றனர் எனத் தெரிய வந்தது.
கண்காணிப்பு கேமராக்கள் இயங்காதது குறித்து தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம், இந்தியத் தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்க உள்ளேன் என்றார் ரவிக்குமார்.