எங்கே போயின ஏரிகளும் குளங்களும்?

அண்டை மாநிலங்களோடு தண்ணீர் பிரச்னையில் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. நீராதாரங்களைத் தொலைத்துவிட்ட இன்றைய அவல நிலையில், நம் முன்னோர்களின் நீர் மேலாண்மை அறிவை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
எங்கே போயின ஏரிகளும் குளங்களும்?
Published on
Updated on
2 min read

அண்டை மாநிலங்களோடு தண்ணீர் பிரச்னையில் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. நீராதாரங்களைத் தொலைத்துவிட்ட இன்றைய அவல நிலையில், நம் முன்னோர்களின் நீர் மேலாண்மை அறிவை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

தமிழர்களின் நீர் மேலாண்மை குறித்த பல வியத்தகு சான்றுகள் சங்க இலக்கியங்களிலே காணப்படுகின்றன.

மழைநீரை சேமித்து வைப்பதற்கு ஏற்ற நீர்நிலைகளை அமைப்பது மன்னரின் தலையாய கடமை என்று புறநானூற்றுப் பாடல் ஒன்று கூறுகிறது.

நிலன் நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்

தட் டோரம்ம இவன்தட் டோரே

தள்ளாதோர் இவன்தள்ளா தோரே (புறம் 18)

நீர்நிலைகளின் பல்வேறு பெயர்களை உரிச்சொல் நிகண்டு குறிப்பிடுகிறது.

இலஞ்சி, கயம், கேணி, கோட்டகம், ஏரி,

மலங்கள், மடு, ஓடை, வாவி, சலந்தரம்,

வட்டம், தடாகம், நளினி, பொய்கை,

குட்டம், கிடங்கு, குளம், கண்மாய்.

இலஞ்சி என்பது பூங்காக்களிலுள்ள குளத்தைக் குறிக்கும். கயம், வாவி, தடாகம், பொய்கை, குட்டம் போன்றவை பாசனம் இல்லாத நீர்நிலை. ஏரி, கிடங்கு, குளம் போன்றவை பாசனத்திற்குப் பயன்பட்டது. இயற்கையான பள்ளங்களில் நீர் தேங்குமிடம் மடு. நீர் ஓடும் இடம் ஓடை. ஏந்தல் - சிறிய ஏரி, தாங்கள் - தண்ணீரை ஏந்திப் பிடித்துள்ள இடம். கண்மாய் - தென் தமிழ்நாட்டில் ஏரிக்கு வழங்கும் பெயர் (கம் - நீர், வாய் - இடம்).

தமிழர்களிடமிருந்தே ஏரித் தொழில்நுட்பம் உலகெங்கும் பரவியது என்பதற்கு சான்றாக பல்வேறு மொழிகளிலுள்ள நீர்நிலைகளைக் குறிக்கும் சொற்களிலிருந்து அறியலாம்.

குளம் தொட்டு, கோடு பதித்து, வரி சீத்து

உளம் தொட்டு, உழுவயல் ஆக்கி, வளம் தொட்டுப்

பாகுபடும் கிணற்றோடு என்று இவை பாற்படுத்தான்

ஏகும் சுவர்க்கம் இனிது (சிறுபஞ்ச மூலம் 64)

-எனும் சிறுபஞ்சமூலப் பாடலுக்கு முனைவர் பழ. கோமதிநாயகம் தமது "தமிழக பாசன வரலாறு' எனும் நூலில் கீழ்கண்டவாறு பொருள் தருகிறார்.

1. குளம் அமைத்தல், 2. மிகை நீர் வழிய கலிங்கு - மிகை நீர் வெளியேறும் பாதை (கோடு) அமைத்தல், 3. குளத்துக்கு வரும் வரத்துக்கால், விவசாயத்துக்கு தண்ணீர் வழங்கும் மதகு, தூம்பு கலிங்கிலிருந்து வெளியேறும் பாதை ஆகிய வழிகளைச் செவ்வனே அமைத்தல், 4. பாசனம் பெறும் பகுதியை உழுவயலாக்குதல், 5. தண்ணீர் குறைவின்போது பயன்படுத்த ஊர் பொதுக் கிணறு அமைத்தல் ஆகிய ஐந்தையும் செய்பவன் சொர்க்கத்துக்குப் போவான்.

குடஓலை முறையில் தேர்ந்தெடுத்த ஏரி வாரியக்குழு பாசனப் பணிகளைக் கவனித்தது என்பதை உத்தரமேரூர் கல்வெட்டால் அறியலாம்.

இப்பணிகளைப் பொறுப்பாக கவனித்த ஏரிவாரியப் பெருமக்களை மறைபொருளாகக் கொண்ட அகநானூற்றுப் பாடலைக் காணலாம்.

துய்யவீழ் பனிமலர் உதிர வீசித்

தொழின்மழை பொழிந்த பானாட் கங்குல்

எறிதரைத் திவலை தூடஞ் சிறு கோட்டுப்

பெருங்குளம் காவலன் போல,

அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே (ஆம் 252)

பத்து வயதுக்குமேல் எண்பது வயதுக்குள் உள்ள அனைவரும் ஆண்டுதோறும் பாசன அமைப்புகளில் ஒரு குழி (6 அடிக்கு 6 அடி) வண்டலைத் தோண்டியெடுக்க வேண்டும். தவறினால் 4 பொன் அபராதம் என்று கட்டளையிட்டதாக ஒரு கல்வெட்டு கூறுகிறது.

1970-இல் பொதுப்பணித்துறையின் புள்ளிவிவரப்படி, தமிழ்நாட்டில் 39,202 ஏரிள் இருந்தன. தற்போதுள்ள ஏரிகளில் பெரும்பாலானவை கி.பி. 3-ஆம் நூற்றாண்டு முதல் 8-ஆம் நூற்றாண்டுக்குள் உருவானவை. 1000 ஆண்டுகளுக்கு முன்பு உருவான பழைய ஏரிகள் 116 என்றும், இவற்றுள் செம்பரம்பாக்கம் ஏரி, தூசி மாமண்டூர் ஏரி, காவேரிப்பாக்கம் ஏரி, தென்னேரி, வீராணம் ஏரி, உத்திரமேரூர் ஏரி, ராசு சிங்க மங்கலம் ஏரி, பெருமாள் ஏரி, மதுராந்தகம் ஏரி, இராமநாதபுரம் கண்மாய், கடம்பா குளம் எனப் பட்டியலிடப்படுகிறது. இன்றும் அழியாது பயன்பாட்டில் உள்ள இந்த ஏரிகளின் இன்றைய நிலை என்ன?

பராந்தகசோழன் (கி.பி.907 - 953) காலத்தில் உருவாக்கப்பட்ட வீரநாராயணன் ஏரியின் (வீராணம் ஏரி) கொள்ளளவு 1923-ஆம் ஆண்டில் 41 மி.க.மீ. தற்போதைய கொள்ளளவு 25 மி.க.மீ. ஆயிரம் ஆண்டுகள் முன்னோர்களால் காப்பாற்றப்பட்ட ஏரியின் கொள்ளவே ஐம்பது ஆண்டுகளில் பாதியாகக் குறைத்துள்ளோம்.

1800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்லணைதான் இன்று உபயோகத்திலிருக்கும் நீர்ப்பாசன கட்டமைப்பில் உலகத்திலேயே பழமை வாய்ந்தது.

ஏரிகள் ஒவ்வொன்றிலும் இருக்கும் கல்வெட்டில் ஏரியை உருவாக்கியவர், காலம், அளவு, பயன்பாடு, ஆயக்கட்டு போன்றவை பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சிலவற்றை மட்டுமே அகழ்வாய்வாளர்கள் கண்டுபிடித்து வெளிக் கொணர்ந்துள்ளனர். மற்ற ஏரிகளின் கல்வெட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த ஏரிகளின் வரலாற்றை நாம் முழுமையாக அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். ஆய்வு மாணாக்கர் இம்மாதிரி முயற்சிகளில் இறங்கி இன்னும் புதைந்து கிடக்கும் நமது தமிழகப் பெருமைமிகு வரலாற்றை உலகறியச் செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com