
சென்னை: வேறு கட்சியிலிருந்து அதிமுகவில் இணைந்தவர்களில் பண்ருட்டி, பொன்னுசாமி, பரிதி இளம் வழுதி ஆகியோர் தோல்வியடைந்தனர். அதேநேரத்தில் தேமுதிகவிலிருந்து அதிமுகவில் இணைந்த மாஃபா பாண்டியராஜன் வெற்றி பெற்றார்.
தேமுதிகவில் பிரதான தலைவர்களாக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் அதிமுகவில் இணைந்தனர்.
கடந்த 2011 ஆம் ஆண்டில் ஆலந்தூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளராக போட்டியிட்ட பண்ருட்டி ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். விஜயகாந்துடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவர் கட்சியிலிருந்து விலகியதோடு, சட்டப் பேரவை உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்தார். பின்னர் அதிமுகவில் சேர்ந்த அவருக்கு, மீண்டும் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. எனினும் அவர் திமுகவின் தா.மோ.அன்பரசனிடம் தோல்வியடைந்தார்.
இதேபோல திமுகவிலிருந்து விலகி, அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி சென்னை எழம்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளாரக களம் இறக்கப்பட்டார். அவர் திமுக வேட்பாளர் கே.எஸ்.ரவிச்சந்திரனிடம் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
மாஃபா பாண்டியராஜன் வெற்றி
தேமுதிக சார்பில் கடந்த 2011 ஆம் ஆண்டில் விருதுநகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாஃபா பாண்டியராஜன், அதிமுக ஆதரவு நிலையை எடுத்தார். கடந்த சட்டப் பேரைவத் தொடர் முடிவடைந்தததும் அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துவிட்டு அதிமுகவில் இணைந்தார்.
நடைபெற்ற தேர்தலில் பாண்டியராஜனுக்கு ஆவடி தொகுதியை ஒதுக்கீடு செய்தது அதிமுக. அவர் திமுக வேட்பாளர் எஸ்.எம்.நாசரை சுமார் 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.