உதயசூரியன் உதித்தால்தான் நல்லாட்சி மலரும்: கருணாநிதி
By DN | Published On : 27th April 2016 08:32 AM | Last Updated : 27th April 2016 08:32 AM | அ+அ அ- |

தமிழ்நாட்டில் உதயசூரியன் உதித்தால்தான் நல்லாட்சி மலரும் என, திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
மன்னார்குடியில்... மன்னார்குடி மேலராஜவீதி தந்தை பெரியார் சிலை அருகிலும், வடுவூர் கடை வீதியிலும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மன்னார்குடி தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து, கருணாநிதி பேசியதாவது:
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா வழி நடக்கும் திராவிட இயக்கம் திமுக.
சூரியன் உதித்தால் உலகுக்கு வெளிச்சம் கிடைப்பதுபோல, தமிழ்நாட்டில் உதயசூரியன் உதித்தால்தான் நல்லாட்சி மலரும்.
திராவிட இயக்கத்தின் செல்லப்பிள்ளையாக, எனது நண்பர் மன்னையின் வழித்தோன்றலான டி.ஆர்.பி.ராஜாவுக்கு வெற்றி வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்றார்.
மன்னார்குடி நகரில் கீழப்பாலம், பந்தலடி தந்தை பெரியார் சிலை பகுதிகளிலும், கூத்தநல்லூரில் இருந்து வடுவூர் வரை ஏராளமான திமுக கூட்டணி கட்சியினர், கருணாநிதிக்கு வரவேற்பு அளித்தனர்.
இதில் கட்சியின் மன்னார்குடி தொகுதி வேட்பாளர் டி.ஆர்.பி. ராஜா, மாவட்ட திமுக செயலர் பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூத்தாநல்லூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம்: கூத்தாநல்லூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் அமைக்கப்படும் என்று திருவாரூர் தொகுதி திமுக வேட்பாளரும், அந்தக் கட்சியின் தலைவருமான கருணாநிதி கூறினார்.
திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கூத்தாநல்லூரில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது:
இந்தப் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான புதிய வருவாய் வட்டம் கூத்தாநல்லூரைத் தலைமையிடமாகக் கொண்டு, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உருவாக்கப்படும். பண்டித ஜவாஹர்லால் நேருவால் கொரடாச்சேரி பகுதியில் திறக்கப்பட்டு, அதிமுக அரசால் மூடப்பட்டுள்ள அரசு மருத்துவமனை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தக் கோரிக்கைகள் நிறைவேற வேண்டுமானால், இந்தப் பகுதி வாக்காளர்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி, திருத்துறைப்பூண்டியில் ஆவின் பால் நிலையம் உருவாக்கப்படும் என்றார் கருணாநிதி.