திமுகவின் தேர்தல் அறிக்கை ஏமாற்று நடவடிக்கை: ஜெயலலிதா
By DN | Published On : 13th May 2016 08:08 AM | Last Updated : 13th May 2016 08:08 AM | அ+அ அ- |

திமுகவின் தேர்தல் அறிக்கை ஏமாற்று நடவடிக்கை என, தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
அதிமுக தேர்தல் அறிக்கை கடந்த 5-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அனைத்து தரப்பு மக்களின் நலன்களை கருத்தில்கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டங்கள் செயல்படுத்துவதற்கு சாத்தியமானவை என சிந்தித்து தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை. வேலைவாய்ப்பு பெருக வேண்டும்; தொழில் வளம் பெருக வேண்டும்; உள்கட்டமைப்புகள் மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட நீண்டகால வளர்ச்சியை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கை.
ஆனால், திமுக தலைவர் கருணாநிதி இந்த அறிக்கையை தொடர்ந்து குறை கூறி வருகிறார். மக்களை ஏமாற்றுவதற்காக இலவசங்களை நாங்கள் அறிவித்துள்ளோம் என திமுக தலைவரும், அவரது தனயனும் பொய்ப் பிரசாரம் செய்து வருகின்றனர். மேலும், தங்களது தேர்தல் அறிக்கையை திமுகவினரே சூப்பர் ஹீரோ என்றும், கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கை என்றும் கூறிவருகின்றனர். ஏமாற்று அறிக்கைகளை வெளியிடுபவர்கள்தான் இவ்வாறு கூறிக் கொள்வர்.
அதிமுகவின் தேர்தல் அறிக்கை சாமானிய மக்களுக்கான அறிக்கை. எனவே, இந்த அறிக்கைக்கு எந்த அடைமொழியும் தேவையில்லை. எங்களது அறிக்கையில், திட்டங்களில் குறை கூறும் கருணாநிதி, அவர் ஆட்சி செய்த 5 ஆண்டுகளில் ஏழை, எளிய மக்களை கை தூக்கிவிடும் எந்தத் திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. எழை, எளியோர் மீது திமுகவுக்கு அக்கறையில்லை. எனவேதான், திமுக அறிக்கையில் ஏழைகளுக்கான வாக்குறுதிகள் எதுவும் இடம்பெறவில்லை. ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்தமாட்டோம் என நேரடியாகக் கூறும் தைரியமும் இல்லை. அம்மா உணவகத்தை முடக்குவது, சுயநிதி கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு அரசே வழங்கும் கட்டணத்தை மறுப்பது என மறைமுகமாக பல்வேறு அம்சங்களை குறிப்பிட்டுள்ளனர். அதிமுக தேர்தல் அறிக்கையில் அனைத்தும் வெளிப்படையே. இந்த அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகள் அனைத்தும் திட்டங்களாக நிறைவேற்றப்படும் என்றார் அவர்.