

தென்காசி அய்யாபுரம் தேவி ஸ்ரீ முப்புடாதி அம்மனுக்கு ஐந்து நாள் சித்திரை திருவிழா, திரளான பக்தர்கள் புடைசூழ அண்மையில் நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள அய்யாபுரத்தில், சுமார் 10-வது தலைமுறையாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் இத்திருவிழா அன்னை தேவி ஸ்ரீ முப்புடாதியம்மனுக்கும், தேவி ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கும், மகன் பைரவருக்கும் நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் நடைபெறும் இத்திருவிழா, இவ்வாண்டு சித்திரை மாதம் மே 4-ம் தேதி ஆரம்பமாகி மே 9 நண்பகல் வரை நடைபெற்றது. திருவிழாவின் முதல் நாளான சித்திரை 24 (மே 4) தேதி வெள்ளிக்கிழமை அன்று சுமார் மாலை 8 மணியளவில் பக்தர்களுக்கு காப்புக்கட்டு வைபோவமும், அம்மனுக்கு சிறப்புப் பூஜையும் கலைநிகழ்ச்சியும் மற்றும் அதனைத் தொடர்ந்து அம்மன், சிறப்பு அலங்காரம் வடிவமைக்கப்பெற்ற சப்பரத்தில் நள்ளிரவில் பவனிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரண்டாம் (மே 5 சனிக்கிழமை) மற்றும் மூன்றாம் நாளில் (மே 6 ஞாயிற்றுக்கிழமை), மாலை 8 மணி அளவில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் கூடிய பூஜையும், அதனைத் தொடர்ந்து சப்பர வீதி உலா நடைபெற்றது. நான்காம் நாளில் (மே 7 திங்கக்கிழமை) தேவி ஸ்ரீ முப்புடாதி அம்மனுக்கு, மாக்காப்பு அலங்காரத்துடன் சிறப்புப் பூஜையும் அதனைத் தொடர்ந்து நள்ளிரவில் அன்னப்பறவை வடிவில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் பவனிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஐந்தாம் நாளில் (மே 8 செவ்வாய்க்கிழமை) காலை ஒன்பது மணி முதல் திரளான பக்தர்கள், அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல், முடிக் காணிக்கை செலுத்துதல், காது குத்துதல் ஆகிய நேற்றிக் கடன்களைச் செலுத்தினார்கள். மாலை 6 மணி அளவில் சக்தி விநாயகர் ஆலயத்திலிருந்து, தேவி ஸ்ரீ முப்புடாதி அம்மனுக்கு திருக்குற்றாலத்தீர்த்தம் எடுத்து வருதலும், இரவு பத்து மணி அளவில் நெல்லைப்புகழ் தமிழ் பாரம்பரிய கரகாட்டமும், அதனைத் தொடர்ந்து, அதிகாலை 4 மணி அளவில் சிறப்பு அலங்காரத்துடன் கூடிய சப்பரத்தில் சிம்ம வாகனத்தில் அமர்ந்து தேவி ஸ்ரீ முப்புடாதி அம்மன் வீதி உலாவாக வந்து, பக்தர்களுக்கு அருள் புரிந்தார்.
அப்பொழுது, அம்மனைத் தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கும்படாகர்ணம் போட்டுத் தங்களின் வேண்டுதல்களைச் செலுத்தினார்கள். காலை சுமார் 10 மணி அளவில், தமிழ் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டமும், அதனைத் தொடர்ந்து நண்பகல் 12 மணி அளவில் தேவி ஸ்ரீ முப்புடாதி அம்மனுக்கு, சிறப்பு உச்சிகால பூஜையுடன், திருவிழா இனிதே நிறைவுற்றது.
இத்திருவிழா நாட்களில் தினந்தோறும், அம்மன் ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இத்திருவிழாவில், நெல்லைப்புகழ் கந்தசுவாமி குழுவினரின் நையாண்டி மேளம் மற்றும் கேரளா சண்டா மேளமும் இடம்பெற்றது. 3 நாள் கொடையாக தேவி ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு புரட்டாசி மாதத்திலும், 2 நாள் கொடையாக மகன் பைரவருக்கு தை மாதத்திலும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 5 நாள் திருவிழா ஏற்பாடுகளை அய்யாபுரம் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
தகவல் - கார்த்திகேயன் நடராஜன்
படம் - ஐயப்பன் ஷண்முகம் & ராம்குமார் பாலகன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.