வெள்ளையர் நகரம் (White Town) கறுப்பர் நகரம் (Black Town)
ஆங்கிலேயர் வெள்ளைகாரன் உருவாக்கிய நகரத்தின் மொத்த பரப்பளவு 4 கிலோ மீட்டர் நீளமும், 2 கி.மீ அகலமும் கொண்டது தான். இதற்கு வடக்கே ராயபுரமும், தெற்கே கூவம் முகத்துவாரமும், மேற்கே பக்கிங்ஹாம் கால்வாயும் சூழ்துள்ளது. அதாவது ஒரு புறம் கடல், இரண்டு புறம் ஆறுகள் இருந்துள்ளது, பாலாற்றின் கிளை ஆறுகளாக இருந்த இவை பின்பு பக்கிங்ஹாம் கால்வாயாக உருமாறியுள்ளது.
கோட்டையிக்கு வெளியே வியாபரத்திற்கும் பிற வேலைகளுக்கும் தேவையான தொழிலாளர்களை தங்க வைக்க கறுப்பர் நகரம் தற்போது உள்ள உயர்நீதிமன்றம் உள்ள பகுதியை எல்லையாக கொண்டு 1676-ல் உருவாக்கப்பட்டது, பின்பு தொழிற்வளர்ச்சி அதிகரிக்க கறுப்பர் நகரின் எல்லை அதனை சுற்றியிருக்கும் முத்தியால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்த்து ஜார்ஜ் டவுனாக விரிவடைந்தது. கோட்டைக்குள் இருந்த வெள்ளையர் குடியிருப்பு, தொழிற்சாலை, பிற அலுவலகங்கள் மற்றும் கோட்டைக்கு வெளியே இருந்த கறுப்பர் நகரம் என்றழைக்கப்பட்டது.
இந்தக் கோட்டைதான் தமிழக சட்டப்பேரவையாக இத்தனை ஆண்டுகள் ஓய்வின்றி (திமுக அரசு இதற்கு சற்று ஓய்வு கொடுக்க முயற்சித்தது) பணியாற்றி வருகிறது. தமிழகத்தின் முதல் சட்டப்பேரவை 1921-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதற்கு மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கௌன்சில் என்று பெயர். இந்த சட்டப்பேரவை முதல்முறையாக புனித ஜார்ஜ் கோட்டையில், 1921-ம் ஆண்டு ஜனவரி 9-ந் தேதி கூடியது. கன்னாட் தொடங்கி வைத்தார்.
முதல் உலகப் போரிலும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு பங்கு இருக்கிறது. 1914ஆம் ஆண்டு, செப்டம்பர் 22ந் தேதி இரவு 9.30 மணியளவில் ஜெர்மானிய கடற்படையைச் சேர்ந்த 'எம்டன்' கம்பல் மெட்ராஸ் நகரம் மீது பீரங்கிக் குண்டுகளை வீசியது. எம்டனிலிருந்து கிளம்பிய குண்டுகள் சென்னைத் துறைமுகத்துக்கு வெளியே நின்றிருந்த பிரிட்டீஷ் கப்பல், ஆங்கிலேயருக்குச் சொந்தமான 'பர்மா ஷெல் ஆயில் டாங்குகள்', சென்னை உயர் நீதிமன்றம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை போன்றவற்றில் வீழ்ந்து வெடித்தன.
கோட்டையைப் போன்றே அதில் கம்பீரமாக வானுயரக் காட்சியளிக்கும் கொடி மரமும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. புனித ஜார்ஜ் கோட்டையின் முகப்பில் தேக்கு மரத்தினாலான கொடிக் கம்பத்தில் கிழக்கிந்திய கம்பெனி கொடி பறந்து கொண்டிருந்தது. அதில் கவர்னர் யேல் காலத்தில் பிரிட்டீஷ் அரசின் கொடி பறக்கவிடப்பட்டது. கடற்கரையில் தரைதட்டி உடைந்த லாயல் அட்வெஞ்சர் என்ற கப்பலில் இருந்த தேக்கு மரத்தாலான கம்பம் எடுக்கப்பட்டு கோட்டை கொத்தளத்தில் நிறுவப்பட்டது. 150 அடி உயரம் கொண்ட இந்தக் கொடிக் கம்பம்தான், இந்தியாவிலேயே உயரமானதாகும். இந்திய சுதந்திரத்தின் போது, இதில் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது. தேக்கு மரத்திலான இந்தக் கொடிக் கம்பம் பழுதடைந்ததால், 1994-ம் ஆண்டு இரும்புக் கம்பம் நிறுவப்பட்டது.
கடற்கரையோரம் பெரிய மதிற்சுவர் போலத் தோன்றும் இந்தக் கோட்டைக்குள் ஆயிரம் அதிசயங்கள் புதைந்து கிடக்கின்றன. தமிழக சட்டமன்றம், தலைமைச் செயலகம், ராணுவம் மற்றும் தொல்லியல் துறை அலுவலகங்கள் இங்கு இயங்கி வருகின்றன. இங்கு ஓர் அருங்காட்சியகமும் இருக்கிறது. ஐரோப்பிய பாணியிலான பழம்பெரும் ஓவியங்கள் இங்குள்ளன.
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததும் ஆங்கிலேயர்கள் கப்பலேறிப் போய்விட்டார்கள். ஆனால் வங்கக் கடலை வெறித்தபடி தனது 370 ஆண்டு கால நினைவுகளை சுமந்துகொண்டு இன்றும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது புனித ஜார்ஜ் கோட்டை.