எனக்கு 85 வயதாகிறது. என் மகனுடன் அமெரிக்காவில் வசிக்கிறேன். என் மருமகளுக்கு முன்பு புற்றுநோய் கண்டதால், கருமுட்டையை பத்திரப்படுத்தி விட்டு வைத்தியம் செய்து தற்சமயம் நன்றாக இருக்கிறார். தற்சமயம் செயற்கை முறையில் கருத்தரிக்க முயற்சி செய்கிறார்கள். ஆண் வாரிசு உள்ளதா? தாய் இல்லாத என் மகனை நன்றாக வளர்த்து அமெரிக்காவுக்கு படிக்க அனுப்பி தற்சமயம் அமெரிக்க குடியுரிமை பெற்று பெரிய பதவியில் உள்ளார். நூறு பேருக்கு மேல் அவருக்கு கீழ் வேலை செய்கிறார்கள். பத்தில் செவ்வாய் ஆட்சி என்பது சிறப்பானது என்கிறார்க

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், துலா ராசி, விசாக நட்சத்திரம். ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் குருபகவானின்

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், துலா ராசி, விசாக நட்சத்திரம். ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (விசாக நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் உச்ச வீடான ரிஷப ராசியை அடைகிறார். ஆறாமதிபதியான கிரகம் துர்ஸ்தானாதிபதியாக அமைந்து உச்சதிரிகோண ஸ்தானத்தில் இருப்பது சிறப்பு. இதனால் அவரின் அசுப ஆதிபத்யம் பெருமளவுக்குக் குறைந்து விடும் என்றும் கூறவேண்டும்.
 லக்னம் மற்றும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கு அதிபதியான சனிபகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். லக்னாதிபதி சுபாவ அசுப கிரகமாகி கேந்திர ராசியில் இருப்பது சிறப்பாகும். அசுப கிரகங்களுக்கு கேந்திர ஸ்தானங்களில் பலம் அதிகம் என்பது ஜோதிட விதியாகும். லக்னாதிபதிக்கு சிறப்பான பலம் உண்டாகி இருப்பது அவர் வாழப்பிறந்தவர் என்று கூறவேண்டும். அயன ஸ்தானாதிபதியும் சுக ஸ்தானத்தில் இருப்பது குடும்ப வாழ்க்கைக்கு அனுகூலமான அம்சமாகும். பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (திருவோண நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார்.
 பூர்வபுண்ணியாதிபதி பன்னிரண்டாம் வீட்டில் மறைந்திருப்பது சிறுகுறை என்றாலும் அவர் விபரீத ராஜயோகம் (எட்டாமதிபதி பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்திருப்பது) பெற்றிருப்பது சிறப்பாகும். விபரீத ராஜயோகத்தை உண்டாக்கும் கிரகம் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளை எதிர்பாராத நேரத்தில் ஏற்படுத்திக் கொடுக்கும். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சுய சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். கும்ப லக்னத்திற்கு சுக்கிரபகவான் ஒரு கேந்திரத்திற்கும் ஒரு திரிகோணத்திற்கும் அதிபதியாக ஆவதால் அவர் யோககாரகராகிறார். அவர் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும் அதுவும் சுயசாரத்தில் அமர்ந்திருப்பதும் அவரால் முழுமையான நன்மைகளைக் கொடுக்க முடியும் என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.
 தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சூரியபகவானின் சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். நீச்சம் பெற்ற கிரகம் நீச்ச வர்கோத்தமத்தில் அமர்ந்திருப்பதால் நீச்ச பங்க ராஜயோகம் உண்டாகும். தைரிய முயற்சி வைராக்கிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிலேயே புதபகவானின் சாரத்தில் (கேட்டை நட்சத்திரம்) ஆட்சி பெற்று அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார்.
 தொழில் ஸ்தானாதிபதி தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பெற்று இருப்பதால் இறுதிவரை அதிகாரம் செய்யும் பதவிகளில் கோலோச்சும் யோகம் உண்டாகும். முயற்சி ஸ்தானாதிபதி ஆட்சி பெற்று இருப்பதால் சரியாக சிந்தித்து திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெற முடியும் என்றும், குறிக்கோள்களை குறித்த காலத்தில் எட்டி விட முடியும் என்றும் புரிந்து கொள்ள வேண்டும். செவ்வாய்பகவான் பத்தாம் வீட்டில் திக்பலம் பெறுவார் என்பதையும் பஞ்சமகா புருஷ யோகமான ருசக யோகம் பெறுவார் என்பதும் அனைவரும் அறிந்ததே.
 செவ்வாய்பகவான் ஆண் கிரகமாவார். அரசு கிரகமுமாவார். தன்னம்பிக்கை, சாதனைகள் செய்யும் வலிமை, வீரதீர பராக்கிரமங்களில் தேர்ச்சி, உடல் வலிமை, மனவலிமை, துணிச்சல், வாதத்தில் திறமை, துணிந்து எதிலும் தலையிடுகின்ற வேகம் ஆகியவற்றிற்கும் காரணமாகிறார். செவ்வாய்பகவான் பூமிகாரகராகவும் ஆகிறார். இதனால் அசையாச் சொத்துகளிலிருந்து லாபம் உண்டாகும். செவ்வாய்பகவான் அக்னிகிரகமாக ஆவதால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும். மேலும் செவ்வாய்பகவானின் பார்வை லக்னம், சுகஸ்தானம், பூர்வபுண்ணிய ஸ்தானங்களின் மீது படிகிறது. இதனால் உத்தியோகத்தில் மிகப் பெரிய பதவிக்கு ஏன் தலைமைச் செயல் அதிகாரி என்கிற நிலைக்குச் சென்றுவிடுவார் என்றும் உறுதியாகக் கூறலாம்.
 களத்திர ஸ்தானாதிபதியான சூரியபகவான் சுபக் கிரகங்களுடன் இணைந்திருக்கிறார். களத்திர காரகரான சுக்கிரபகவானும் லாப ஸ்தானத்தில் அமர்ந்து வலுப் பெற்றிருக்கிறார். இதனால் மணவாழ்க்கையில் இறுதிவரை எந்த பாதிப்பும் ஏற்படாது. குருபகவானின் பார்வை ஆயுள்காரகரும் லக்னாதிபதியுமான சனிபகவான் மீதும், ஆயுள் ஸ்தானத்தின் மீதும் படிவதால் அவருக்கு தீர்க்காயுள் உண்டு.
 புத்திர ஸ்தானாதிபதி புத்திரகாரகருடன் இணைந்திருப்பதால் புத்திர பாக்கியம் உண்டு. பித்ருகாரகருடன் குருபகவான் பலம் பெற்று இணைந்திருப்பதால் ஆண் வாரிசு உண்டாகவும் வாய்ப்பு உள்ளது. தற்சமயம் புதபகவானின் தசையில் சனிபகவானின் புக்தி இன்னும் ஒன்றரை ஆண்டுகள் நடக்கும். இந்த காலகட்டத்தில் செயற்கை முறையில் கரு உண்டாக்கும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். குழந்தை பிறப்பு நல்ல முறையில் நடந்தேறும். பாக்கிய ஸ்தானமும் பாக்கியாதிபதியும் சூரியபகவானும் வலுவாக உள்ளதால் உங்களுக்கும் தீர்க்காயுள் உண்டு. இறுதிவரை உங்கள் மகன், பேரக்குழந்தையுடன் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் காலம் கழியும். பிரதி தினமும் இல்லத்திலேயே விநாயகப்பெருமானை வழிபட்டு வரவும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com