எனது 53 -ஆம் வயதில் ஒரு பெரிய விபத்தில் சிக்கி கிட்டத்தட்ட ஓராண்டு கோமாவில் இருந்து பிழைத்தேன். பெரிய அளவுக்கு செலவு ஆகிவிட்டது. தற்சமயம் ஓரளவுக்கு பழைய நிலைமைக்கு வந்து விட்டேன். மறுபடியும் தொழில் செய்யத் தொடங்கலாமா? என் வாழ்க்கையில் மறுபடியும் பொருளாதார வளம் உண்டாகுமா? கடன்கள் முழுவதுமாக அடைந்து விடுமா? எதிர்காலம் எவ்வாறு அமையும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகர், காரைக்குடி

உங்களுக்கு ரிஷப லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான

உங்களுக்கு ரிஷப லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டில் ராகுபகவானின் சாரத்தில் (சுவாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். லக்னம் மற்றும் ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் லக்னத்தில் சூரியபகவானின் சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) ஆட்சி பெற்று அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆத்ம நண்பரின் வீடான மகர ராசியை அடைகிறார்.
 லக்னத்தில் சுக்கிரபகவான் ஆட்சி பெற்று இருப்பதால் பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான மாளவிகா யோகம் உண்டாகிறது. மாளவிகா யோகம் உள்ளர்கள் எதையும் கச்சிதமாக புரிந்து கொண்டு திறம்படச் செயல் படுத்துவார்கள். எதிர்வரும் சங்கடங்களையும் பிரச்னைகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். இனிமையாகப் பேசுவார்கள். நிறைய நண்பர்களைக் கொண்டிருப்பார்கள். லக்னத்தில் லக்னாதிபதி ஆட்சி பெற்று அமர்ந்திருப்பவர்களை வாழப்பிறந்தவர்கள் என்று கூறலாம். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் பூர்வபுண்ணியம், புத்திரம் புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) நீச்சம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைந்து ஆட்சி, உச்சம் மற்றும் மூலதிரிகோணம் பெறுகிறார். இதனால் புதபகவானுக்கு முழுமையான நீச்சபங்க ராஜயோகம் உண்டாகிறது.
 பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் திக்பலம் பெற்று சுயசாரத்தில் (அனுஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். ரிஷப லக்னத்திற்கு ஒரே கிரகம் தர்மகர்மாதிபதிகளாக வரும் தனித்தன்மை உடையது என்பதை அனைவரும் அறிந்ததே. ஸ்திர லக்னங்களுக்கு பாக்கிய ஸ்தானமான ஒன்பதாமிடம் பாதக ஸ்தானமாக வந்தாலும் சனிபகவான் பாதகம் செய்வதில்லை என்பதும் அனுபவ உண்மை.
 சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கு அதிபதியான சூரியபகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். ரிஷப லக்னத்திற்கு சூரியபகவான் சுபாவ அசுபக் கிரகமாகி கேந்திர ஸ்தானத்திற்கு அதிபதியாக வருவதால் லக்ன சுபராகவே கருதப்படுகிறார். அதனால் ரிஷப லக்ன காரர்களுக்கு சூரிய தசை சிறப்பான நன்மைகளைச் செய்கிறது என்பதும் அனுபவ உண்மை.
 களத்திர, நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியில் ஆட்சி பெறுகிறார். அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் புதபகவானின் சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரம்) உச்சம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான மீன ராசியை அடைகிறார்.
 கேதுபகவான் லக்னத்தில் சந்திரபகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். ராகுபகவான் களத்திர ,நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் புதபகவானின் சாரத்தில் (கேட்டை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார்.
 உங்கள் ஜாதகம் சராசரிக்கும் சற்று கூடுதலான பலம் பெற்றுள்ளது என்று கூறமுடிகிறது. அஷ்டமாதிபதியான எட்டாம் வீட்டுக்கதிபதியான குருபகவான் ஆயுள் ஸ்தானாதிபதியாகி எட்டாம் வீட்டிற்கு எட்டாம் வீடான மூன்றாம் வீட்டில் உச்சம் பெற்றிருக்கிறார். நவாம்சத்திலும் ஆட்சி பெற்றிருப்பதால் முழுமையான பலம் பெற்றிருக்கிறார். குருபகவானின் ஐந்தாம் பார்வை களத்திர, நட்பு ஸ்தானத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சனி, ராகு பகவான்களின் மீதும் படிகிறது. சனிபகவான் ஏழாம் வீட்டில் திக் பலம் பெற்று லக்னத்தைப் பார்வை செய்வது மகா கீர்த்தி யோகம் என்று கூறப்படுகிறது.
 குருபகவானின் ஏழாம் பார்வை பாக்கிய ஸ்தானத்தின் மீதும் ஒன்பதாம் பார்வை லாப ஸ்தானத்தின் மீதும் அங்கு அமர்ந்து இருக்கும் புதஆதித்யர்களின் மீதும் படிகிறது. சந்திரபகவானும் குருபகவானுக்கு கேந்திரத்தில் இருப்பதால் சிறப்பான கஜகேசரி யோகமும் உண்டாகிறது. இதனால் உங்களுக்கு பூர்ணாயுள் உண்டாகும். அதாவது தொண்ணூற்று இரண்டு வயதுக்கு மேல் ஆயுள் உள்ளது என்று கூறவேண்டும். குருபகவானின் உன்னதமான நிலை, ஒரு ஜாதகரை எந்த வகையிலாவது நிச்சயமாக உயர்த்துகிற சக்தியைப் பெற்றிருக்கிறது. உங்களுக்கு குருபகவானின் முழுமையான அருள் கிடைக்கப் பெற்றுள்ளதால், நினைத்து பார்க்க முடியாத கண்டத்திலிருந்து தப்பித்து நல்லபடியாக மறுபடியும் இயல்பான ஆரோக்கியத்தைப் பெற்று விட்டீர்கள் என்றால் மிகையாகாது.
 தனாதிபதியும் முழுமையான நீச்சபங்க ராஜயோகம் பெற்று லாப ஸ்தானத்தில் அமர்ந்து லாபாதிபதியால் பார்க்கப்படுவதால் பண நடமாட்டம் இறுதிவரை சீராகவே அமையும். பொருளாதாரத்தில் எந்த தொய்வும் ஏற்படாது. தற்சமயம் சுக்கிர மகா தசையில் சுய புக்தி நடக்கத் தொடங்கி 14 மாதங்கள் ஆகின்றன. இன்னும் ஆறு மாதங்கள் கழித்து நீங்கள் மறுபடியும் தொழில் செய்யத் தொடங்கலாம். அதாவது முதல் 20 மாதம் முடிந்தவுடன் சுக்கிர மகாதசை வேலை செய்யத் தொடங்கும். நீங்கள் செய்து வந்த தொழிலையே செய்யலாம். விரைவில் பழைய நிலையை எட்டி விடுவீர்கள்.எதிர்காலம் வளமாக அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com