எனது மகனுக்கு 27 வயதாகிறது. மின் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும்? சனி, சந்திரன் சேர்க்கை இருப்பதால் புனர்பூ தோஷம் உள்ளதா? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா?
வாசகர், ராசிபுரம்.
உங்கள் மகனுக்கு சிம்ம லக்னம், கும்ப ராசி, அவிட்டம் நட்சத்திரம். லக்னாதிபதி சூரிய பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில், தன லாபாதிபதியான புதபகவானுடன் (புத ஆதித்ய யோகம்) இணைந்திருக்கிறார். பூர்வபுண்ணிய, அஷ்டம ஸ்தானாதிபதியான குரு பகவான் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டையும், அங்கமர்ந்திருக்கும் களத்திர ஸ்தானாதிபதியையும், சந்திர பகவானையும் (குரு சந்திர யோகம்) செவ்வாய் பகவானையும் (குரு மங்கள யோகம்) பார்வை செய்கிறார். ஏழாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும், அங்கு அமர்ந்திருக்கும் தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிர பகவானையும், ஒன்பதாம் பார்வையாக லாப ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். களத்திர ஸ்தானத்தில் சனி பகவான் வர்கோத்தமம் பெற்றிருப்பது சிறப்பாகும். குரு பகவானின் பார்வை சந்திர, சனி பகவான்களின் மீது பதிவதால் புனர்பூ தோஷம் குறைந்துவிடும். தற்சமயம் குரு பகவானின் தசையில் புத பகவானின் புக்தி நடப்பதால் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் படித்த நல்ல வேலையில் உள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.