எனக்கு 58 வயதாகிறது. நான் நியூசிலாந்து நாட்டின் குடியுரிமை பெற்றவன். பல ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வசிக்கிறேன். சனி தசையில் ஓரளவு நல்ல வளர்ச்சி ஏற்பட்டாலும் இறுதிப்பகுதியில் பல கஷ்டங்களைப் பட்டுவிட்டேன். தற்சமயம் புதன் தசை என்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் எந்த வேலையும் கிடைக்காததால் இரண்டு தடவை தற்காலிகமாக திரும்பி வந்தேன். சென்ற 6 மாதங்களுக்கு முன்பு நிரந்தரமாக வரவேண்டியதாகிவிட்டது. இங்கும் வேலை எதுவும் கிடைக்கவில்லை, மறுபடியும் வெளிநாடு செல்வேனா? என் எதிர்காலம் எவ்வாறு அமையும்?  - வாசகர், சென்னை

உங்களுக்கு சிம்ம லக்னம், துலாம் ராசி, சித்திரை நட்சத்திரம். அயன மோட்ச ஸ்தானாதிபதியான சந்திரபகவான் தைரிய முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் செவ்வாய்பகவானின்

உங்களுக்கு சிம்ம லக்னம், துலாம் ராசி, சித்திரை நட்சத்திரம். அயன மோட்ச ஸ்தானாதிபதியான சந்திரபகவான் தைரிய முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் செவ்வாய்பகவானின் (சித்திரை நட்சத்திரம்) சாரத்தில் வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமர்ந்திருக்கும் நிலை) அமர்ந்திருக்கிறார். பன்னிரண்டாம் வீடு வெளிநாட்டைக் குறிக்கும். பிறந்த ஊரைவிட்டு வெளியூரில்தான் வசிக்க நேரிடும் என்று குறிப்பாக கூறினாலும் கடக ராசிக்கு அதிபதியான சந்திரபகவான் சர ராசி மற்றும் நீர் ராசியாகி, நீர் கிரகமாகி மற்றொரு சர ராசியான துலாம் ராசியில் வர்கோத்தமத்தில் இருப்பது வெளிநாட்டில்தான் இறுதிவரை வாழவேண்டும் என்கிற அமைப்பை உணர்த்துகிறது. இத்துடன் லக்னம், பூர்வ புண்ணியம் மற்றும் பாக்கிய ஸ்தானங்கள், ஸ்தானாதிபதிகளின் பலத்தையும் சீர்தூக்கி பார்க்க வேண்டும்.
 உங்களுக்கு லக்னாதிபதியான சூரியபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சனிபகவானின் (உத்திரட்டாதி நட்சத்திரம்) சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். லக்னாதிபதி அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் அமர்ந்திருப்பது தீர்க்காயுள் யோகம் என்று கூறவேண்டும். அதோடு மீன ராசியான மற்றொரு நீர்ராசியாகவும் ஆனபடியால் வெளிநாட்டில் இறுதிவரை வசிப்பதற்கும் ஏது
 வாக அமைகிறது. அதேநேரம் சந்திரபகவானுக்கு இருபுறமும் கிரகங்கள் இல்லாதது சிறு குறை. இதை கேமதுரும யோகம் என்றும் கூறுவார்கள். இந்த சந்திரபகவானை குருபகவான் பார்வை செய்வதால் குருசந்திர யோகம் உண்டாகி, கேமத்துரும யோகத்தில் வீரியம் குறைந்து மனக்குழப்பங்கள் நீங்கும். சந்திரபகவானின் பாதுகாப்பற்ற நிலைமையும் நீங்கிவிடுகிறது.
 பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் களத்திர, நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் செவ்வாய்பகவானின் (அவிட்டம் நட்சத்திரம்) சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். பூர்வபுண்ணியாதிபதியாகிய ஒரு திரிகோணாதிபதி மற்றொரு கேந்திரத்தில் இருப்பது சிறப்பென்றாலும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கு விரய ஸ்தானத்தில் இருப்பதை சிறு குறை என்றே கூறவேண்டும். அதாவது, எட்டாம் வீட்டிற்கு விரைய ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் இருக்கிறார். எட்டாம் வீட்டை புதையல்வீடு என்கிறோம். அதனால் புதையல் போன்ற அதிர்ஷ்ட வாய்ப்பு கைநழுவிப்போகவும் வாய்ப்புள்ளது என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.
 சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் களத்திர, நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் ராகுபகவானின் (சதய நட்சத்திரம்) சாரத்தில் வர்கோத்தமத்தில் அமர்ந்து இருக்கிறார். ஒரு கேந்திராதிபதி மற்றொரு கேந்திரத்திலும் ஒரு திரிகோணாதிபதி ஒரு கேந்திரத்திலும் அமர்ந்திருப்பது சிறப்பாகும். செவ்வாய்பகவான் பூமிக்கிரகமாகி அதிர்ஷ்டத்துக்கு அதிபதியான குருபகவானுடன் இணைந்திருப்பதால் குருமங்கள யோகம் முழுமையாக உண்டாகி நிலபுலன்கள் மூலமும் கட்டட கட்டுமானத்துறைகள் மூலமும் தாமிரம், தங்கம் போன்ற உலோகங்கள் மூலமும் யோக பாக்கியங்கள் உண்டாகும். அதோடு வங்கி, காப்பீடு, கெமிக்கல் துறைகளின் மூலமும் நிரந்தர வருவாய் கிடைக்கும். எரிபொருள், உணவு சம்பந்தப்பட்ட வகையில் தொழில் புரிய முடியும். உடல் உரத்தாலும் ஜீவனம் அமையக்கூடும்.
 தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் ராகுபகவானின் (சதய நட்சத்திரம்) சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் நீச்சமடைகிறார். தைரிய முயற்சி வைராக்கிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் புதபகவானின் (ரேவதி நட்சத்திரம்) சாரத்தில் உச்சம் பெற்று நவாம்சத்தில் தன் ஆத்ம நண்பரான சனிபகவானின் வீடான மகர ராசியை அடைகிறார்.
 ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் ஆறாம் வீட்டிலேயே சந்திரபகவானின் (திருவோண நட்சத்திரம்) சாரத்தில் ஆட்சி பெற்று நவாம்சத்தில் தன் ஆத்ம நண்பரான சுக்கிரபகவானின் ராசியான ரிஷப ராசியை விபரீத ராஜயோகம் பெற்று அமர்கிறார். ராகுபகவான் அயன மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் புதபகவானின் (ஆயில்யம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். கேதுபகவான் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார்.
 பொதுவாக, ஏழாம் வீடு, ஏழாம் வீட்டோன், ஏழாம் வீட்டின் பலம் மற்றும் ஒன்பது, பன்னிரண்டாம் வீடுகளின் பலம் சிறப்பாக அமைந்தால் வெளிநாட்டில் நிரந்தரமாக வாழ குடியுரிமை கிடைக்கும். ஒன்பதாம் வீடு வலுத்திருக்கும் பட்சத்தில் பல வெளிநாடுகளுக்குச் சென்று அந்நியச் செலாவணி ஈட்டுவார். சர ராசிகளில் அதிக கிரகங்கள் இருப்பதற்கும் நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் ராசிகள் வலுத்திருப்பதும் உகந்தது.
 உங்களுக்கு ஏழாம் வீட்டில் குரு, செவ்வாய், புதபகவான்கள் இருக்கிறார்கள். குருமங்கள யோகமும் சிறப்பாக அமைகிறது. சனிபகவான் தன் ராசிக்கு விரய ஸ்தானத்தில் மறைவு பெற்றிருந்தாலும் ஆட்சி பெற்றிருக்கிறார். அதோடு, பயணக்கிரகமான ராகுபகவானும் புதபகவானின் சாரத்திலும் புதபகவான் ராகுபகவானின் சாரத்திலும் அமர்ந்திருக்கிறார்கள். இது சாரபரிவர்த்தனை என்கிற அமைப்பில் வருகிறது. இதனால் புதபகவானின் தசை ராகுபகவானின் பலத்துடன் சேர்ந்து சுபமாக நடக்கும் என்றும் புரிந்துகொள்ள வேண்டும்.
 பொதுவாக, ஒரு தசையின் சுய புக்தி சுப பலன்களைத் தராது என்றும் முதல் ஒன்றரை ஆண்டுகளை தசா சந்தி காலம் என்று கருதி அந்த காலகட்டத்தில் முக்கிய முடிவுகளையும் புதிய முயற்சிகளையும் எடுக்கக் கூடாது என்று கூறுவது வழக்கம். உங்களுக்கு இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் புதமகா தசையில் கேது புக்தி நடக்கும். இந்த கேது புக்தி முடிவதற்குள் மறுபடியும் நீங்கள் குடியுரிமை பெற்றிருக்கும் நாட்டில் வேலை செய்ய சென்று விடுவீர்கள். தொடர்வதும் தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிரபகவானின் புக்தியாக இருப்பதால் உத்தியோகத்தில் மிகவும் உன்னதமான நிலையை எட்டி விடுவீர்கள். இறுதிவரை வெளிநாட்டிலேயே வசிக்கும் ஜாதகம் என்று கூறலாம். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் பிரதி புதன்கிழமைகளில் ஸ்ரீராமபிரானையும் வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com