என் மகனுக்கு 49 வயதாகிறது. தொடர்ந்து நீச்சபங்க ராஜயோக தசைகள் நடந்தாலும் கல்வி, வேலை, பொருளாதாரம் ஆகியவைகளில் ஏதோ ஒரு சுமாரான நிலையிலேயே உள்ளார். இது ஏன்?  மூன்று கிரகங்கள் நீச்சபங்க ராஜயோகம், தர்மகர்மாதிபதி யோகம் போன்ற யோகங்கள் இருந்தும் ஏனிந்த நிலை? சுக்கிர தசை எவ்வாறு இருக்கும்? எதிர்காலம் எவ்வாறு அமையும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகர், திருப்பூர்

உங்கள் மகனுக்கு கடக லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம். லக்னாதிபதியான சந்திரபகவான் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (அனுஷ நட்சத்திரம்) அமர்ந்து

உங்கள் மகனுக்கு கடக லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம். லக்னாதிபதியான சந்திரபகவான் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (அனுஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். விருச்சிக ராசிக்கு அதிபதியான செவ்வாய்பகவான் பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியாகி தொழில் ஸ்தானத்திலேயே சுக்கிரபகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) ஆட்சி பெற்று அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். பொதுவாக, சர்வ இந்திரியங்களில் சிரசு என்று சொல்லக் கூடிய தலையே மிகவும் முக்கியமானதாகும். அப்படிப்பட்ட தலைக்கு உரிய ஸ்தானம் லக்னமாக அமைகிறது. ஆகவேதான் லக்னமும் லக்னாதிபதியும் ராசிச் சக்கரத்தில் பிரதானமாகக் கருதப்படுகிறது. இப்படிப்பட்ட லக்னாதிபதி நல்ல நிலையில் இருக்க வேண்டும். லக்னாதிபதி சுபக்கிரகமாகி லக்னத்திற்கு 5, 9- ஆம் வீடுகளில் இருந்தால் அந்த ஜாதகருக்கு அனைத்து விஷயங்களிலும் நல்ல பலன்களே நடைபெறும் என்று கூறவேண்டும்.

லக்னாதிபதியான சந்திரபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருப்பது சிறப்பாகும். அதோடு சந்திரபகவானை தாய் கிரகம் என்பதால் அன்னை வழி ஆதரவும் சிறப்பாக அமையும். செவ்வாய்பகவானுக்கு அரசியல் ஆதிக்கம், பூமி ஆதிக்கம், உத்தியோக ஆதிக்கம், கர்ம ஆதிக்கம், சகோதர ஆதிக்கம் , மூளை சம்பந்தமான ஆதிக்கம் ஆகிய ஆதிக்கங்கள் உள்ளன. அதோடு ஐந்துவிதமான ரஜ்ஜுக்களில் சிரசு ரஜ்சு அதிக சக்தி வாய்ந்தது. இதற்குரிய மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்று நட்சத்திரங்களும் செவ்வாய் சாரம் பெற்ற நட்சத்திரங்களாகும். இதனால் அவருக்கு மூலதிரிகோணம் பெற்ற செவ்வாய்பகவானின் முழு பலன்கள் கிடைக்கும் என்றும் கூறவேண்டும். செவ்வாய்பகவானை பூமகன் என்றும் பூமிதேவியின் மகன் என்று சொல்லி அவரே பூர்வீகச் சொத்துகளுக்கு அதிபதி என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் ராகுபகவானின் சாரத்தில் (சுவாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியில் நீச்சம் பெறுகிறார். குருபகவானின் ஐந்தாம் பார்வை அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் போககாரகரான ராகுபகவானின் மீதும் படிகிறது. குருபகவானின் ஏழாம் பார்வை தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் செவ்வாய், சனி பகவான்களின் மீதும் படிகிறது. மேலும் குருபகவானின் பார்வை செவ்வாய்பகவானான கர்மாதிபதியின் மீது படிவதால் தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகிறது. மேலும் களத்திர, நட்பு மற்றும் ஆயுள் ஸ்தானாதிபதியான நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ள சனிபகவானையும் பார்வை செய்கிறார். குருபகவானின் ஒன்பதாம் பார்வை அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டின்மீதும் படிகிறது.

தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கு அதிபதியான சூரியபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியில் நீச்சமடைகிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், அயன, மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சுய சாரத்தில் (ரேவதி நட்சத்திரம்) நீச்சம் பெற்றமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார்.

பொதுவாக, அனைத்து கிரகங்களுமே, சுயசாரத்தில் அமர்ந்திருப்பது சிறப்பாகும். நீச்சம் பெற்றிருக்கும் கிரகத்துடன் ஆட்சி, உச்சம் பெற்றுள்ள கிரகம் இணைந்திருந்தால் முழுமையான நீச்சபங்க ராஜயோகம் உண்டாகும் என்பது ஜோதிட விதி. சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் புதபகவானின் சாரத்தில் (ரேவதி நட்சத்திரம்) உச்சம் பெற்றும் வர்கோத்தமத்திலும் (ராசி நவாம்சம் இரண்டிலும் ஒரே வீட்டில் இருக்கும் நிலை) அமர்ந்திருக்கிறார். உச்சம் பெற்ற கிரகம் வர்கோத்தமத்தில் இருப்பது அதி உன்னத அமைப்பாகும். இதனால் புதபகவானுக்கு முழுமையான நீச்சபங்க ராஜயோகம் உண்டாகிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

களத்திர, நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் பகை வீடான சிம்ம ராசியை அடைகிறார். சனிபகவான் அமர்ந்திருக்கும் மேஷ ராசிக்கு அதிபதியான செவ்வாய்பகவான் ஆட்சி பெற்றிருப்பதால் சனிபகவான் முழுமையான நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். கேதுபகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூரம்) நட்சத்திரம் அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். ராகுபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சுய சாரத்தில் (சதய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார்.

அவருக்கு மூன்று திரிகோணாதிபதிகளும் ஓரளவுக்கு சிறப்பான பலம் பெற்றிருக்கிறார்கள். அதேநேரம் நவாம்சத்தில் அவர்களுக்கு பலம் குறைந்திருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. மூன்று கிரகங்கள் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருப்பதையும் கேட்டுள்ளீர்கள்.

பொதுவாக, நீச்சபங்கம் என்றும் நீச்சபங்க ராஜயோகம் என்றும் பார்க்க வேண்டும். நீச்சம் பெற்ற கிரகம் முதலில் நீச்சத்திற்குண்டான பலன்களையும், அதனைத் தொடர்ந்து நீச்சபங்கத்திற்குண்டான பலன்களையும் அதனையும் தொடர்ந்து ராஜயோகப் பலன்களையும் தருவார்கள். அதாவது, சில நேரங்களில் நான்கு பகுதிகளாகவும், சில நேரங்களில் மூன்று பகுதிகளாகவும் சில நேரங்களில் இரண்டு பகுதிகளாகவும் பிரித்து செயல்பட்டு பலன் தருவார்கள். இந்த தசைகள் வாழ்க்கையில் நடைமுறையில் இருப்பதும் அவசியமாகும். வாழ்க்கையின் முற்பகுதியில் அனுகூலமற்ற தசா புக்திகள் நடந்திருப்பதும் சிலருக்கு நற்பலன்கள் உண்டாகாமல் செய்கிறது.

ஜாதகத்திற்கு யோக தசைகள் நடந்தால் அதாவது எந்த வயதில் நடந்தாலும் நற்பலன்கள் உண்டாவதை அனுபவத்தில் பார்க்கிறோம். அவருக்கு அபவாத யோக ஜாதகம் என்று கூற வேண்டும். அதனால் பிறப்பிலிருந்து நடைமுறையில் இருந்த தசைகள், நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருந்தாலும் பெரிதாக வளர்ச்சியைக் கொடுக்கவில்லை. மற்றபடி, தொழில் ஸ்தானாதிபதி அதிபலம் பெற்றிருப்பதால் வாழ்க்கையில் சோடை போகமாட்டார் என்று உறுதியாகக் கூறலாம். அதோடு தர்மகர்மாதிபதியோகமும் சிறப்பாக அமைந்திருக்கிறது. சனி, சுக்கிரன், ராகு- கேது பகவான்கள் பிற்கூறிலேயே பலன் தருவார்கள் என்பதும் ஜோதிட அனுபவமாகும். தற்சமயம் உச்ச வர்கோத்தமம் பெற்ற சுக்கிர பகவானின் தசையில் ராகுபகவானின் புக்தி இன்னும் மூன்றாண்டுகள் நடக்கும். இந்த காலகட்டத்திற்குள் அவர் சார்ந்துள்ள துறையில் நல்ல வருமானம் வரும் நிலைக்கு உயர்ந்து விடுவார். சுக்கிரமகா தசை இன்னும் பன்னிரண்டு ஆண்டுகள் நடக்க உள்ளதால் சிறப்பான நிலையை எட்டி விடுவார். எந்த கவலையும் வேண்டாம். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com