என் மகனுக்கு 39 வயதாகிறது. செய்யாறு சிப்காட்டில் ஒரு கம்பெனியில் சூபர்வைசராகப் பணியில் உள்ளார். முயற்சிகள் பல செய்தும் இதுவரை பெண் பார்த்து மணம் முடிக்க முடியவில்லை. இதற்குத் தகுந்த பரிகாரம் கூறவும்.
வாசகி, திருவத்திபுரம்.
உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம். லக்னம், சுக ஸ்தானத்துக்கு அதிபதியான குரு பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் உச்சம் பெற்று நவாம்சத்தில் தன் மூல திரிகோண வீட்டில் தனுசு ராசியில் அமர்கிறார்.
லக்னாதிபதி ராசியாலும், நவாம்சத்திலும் சிறப்பான பலம் பெற்றிருப்பது, ஜாதகத்திற்கு வலு சேர்க்கும் அமைப்பாகும். குரு பகவானுடன் புத பகவானும் இணைந்திருக்கிறார். இதனால் களத்திர தொழில் ஸ்தானமும் வலுவடைகிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். குருபகவானின் ஐந்தாம் பார்வை அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டின் மீதும், ஏழாம் பார்வை தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தின் மீதும், ஒன்பதாம் பார்வை சுக ஸ்தானமான நான்காம் வீட்டின் மீதும் படிகிறது.
பூர்வ புண்ணியாதிபதி மற்றும் அயன ஸ்தானதிபதியான செவ்வாய் பகவான் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானத்தில் விபரீத ராஜ யோகம் பெற்றமர்ந்திருக்கிறார். பாக்கியாதிபதியான சூரிய பகவானும், லாபாதிபதியான சுக்கிர பகவானும் களத்திர நட்பு ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்கள். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான், பாக்கிய ஸ்தானத்தில் ராகு பகவானுடன் இணைந்திருக்கிறார்.
தற்சமயம் சனி மகாதசை நடக்கத் தொடங்கியிருப்பதால், அவருக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் தகுதியான பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.