என் தந்தை பணியில் இருந்தபோது இறந்துவிட்டார். சில குறைகளைச் சுட்டிக்காட்டி எனக்கு கிடைக்க வேண்டிய கருணை அடிப்படையிலான வேலையை தர மறுக்கிறார்கள். சென்னையில் வழக்கு தொடர்ந்திருக்கிறேன். எப்போது அரசு வேலை கிடைக்கும்? திருமணம் எப்போது நடைபெறும்?
- வாசகி, திருவண்ணாமலை
உங்களுக்கு கடக லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். லக்னாதிபதியான சந்திரபகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் பாக்கியாதிபதியான குருபகவான் (குருசந்திர யோகம்), லாபாதிபதியான சுக்கிரபகவானுடன் இணைந்திருக்கிறார். பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவானுடன் இணைந்திருக்கிறார். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கு அதிபதியான சூரியபகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் வர்கோத்தமம் பெற்றிருக்கும் புதபகவானுடன் இணைந்து புதஆதித்ய யோகத்தைப் பெறுகிறார்.
தற்சமயம் சனிபகவானின் தசையில் சுக, லாபாதிபதியான சுக்கிரபகவானின் புக்தி நடப்பதால் இறந்து போன உங்கள் தந்தையின் வேலை அடுத்த ஆண்டு கருணை அடிப்படையில் கிடைத்துவிடும். இந்த கால கட்டத்திற்குள் களத்திர ஸ்தானாதிபதிக்கு ஏற்ற சமதோஷமுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.