எனக்கு 37 வயதாகிறது. சிறிய வேலைக்குச் செல்கிறேன். வருமானம் போதவில்லை. கடன் உள்ளது. திருமணமும் தடைபடுகிறது. எப்போது திருமணம் நடைபெறும்? பணவரவு கூடும்?
- வாசகர், சேலம்
உங்களுக்கு மீன லக்னம், மகர ராசி, உத்திராடம் நட்சத்திரம். லக்னம் மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான குருபகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான மீன ராசியை அடைகிறார். அவருடன் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சந்திரபகவானும் இணைந்து குருசந்திர யோகத்தைக் கொடுக்கிறார். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி பெற்று சந்திரகேந்திரத்தில் இருப்பதனால் பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான ருசக யோகத்தைப் பெறுகிறார்.
தைரிய, அஷ்டம ஸ்தானங்களான மூன்று, எட்டாம் வீட்டிற்கு அதிபதியான சுக்கிரபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து தன் ஆட்சி வீடான மூன்றாம் வீட்டைப் பார்வை செய்கிறார். ஆறாம் வீட்டுக்கதி பதியான சூரியபகவான் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். பூர்வபுண்ணியாதிபதியான சந்திரபகவான் வர்கோத்தமம் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) பெற்று சிறப்பான குருசந்திர யோகம், குருமங்கள யோகம், சந்திரமங்கள யோகங்களைப் பெறுவதால் புத்திர பாக்கியம் உண்டு.
லாப, அயன ஸ்தானாதிபதியான சனிபகவான் சுக ஸ்தானத்தில் அமர்ந்து ஆறாம் வீட்டையும், பத்தாம் வீட்டையும், லக்னத்தையும் பார்வை செய்கிறார். குருபகவானின் ஐந்தாம் பார்வை தைரிய ஸ்தானத்தின் மீதும், ஏழாம் பார்வை பூர்வபுண்ணிய ஸ்தானத்தின் மீதும் ஒன்பதாம் பார்வை களத்திர ஸ்தானத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சூரியபகவானின் மீதும் (சிவராஜ யோகம்) படிகிறது. பத்தாம் வீட்டில் ராகுபகவான் இருப்பதும் சிறப்பு. தற்சமயம் குருபகவானின் தசையில் முற்பகுதி நடக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து நல்ல காலம் பிறக்கும். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் திருமணம் கைகூடும். வருமானமும் உயரத்தொடங்கும்.