என் மகனுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? எந்த திசையிலிருந்து பெண் அமையும்? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்?
-தமயந்தி, காங்கேயம்.
உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லக்னம், சுக ஸ்தானம் ஆகிய இரண்டு வீடுகளுக்கும் அதிபதியான புத பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து லக்னத்தைப் பார்வை செய்கிறார்.
பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் எட்டாம் வீட்டில் ஆட்சி பெற்றுள்ள அஷ்டமாதிபதியான சனி பகவானுடனும், தைரியாதிபதியான சூரிய பகவானுடனும், ராகு பகவானுடனும் இணைந்திருக்கிறார்.
இந்த நான்கு கிரகங்களும் ராசிக்கு அதாவது தொழில் ஸ்தானத்திற்கு லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் பாவாத் பாவ அடிப்படையில் அமர்ந்திருப்பது சிறப்பு.
ஆறு, பதினொன்றாம் வீடுகளுக்கு அதிபதியான செவ்வாய் பகவான் பன்னிரண்டாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று அமர்ந்திருப்பதும் சிறப்பு.
களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் கேது பகவானுடன் இணைந்து உச்சம் பெற்றமர்ந்திருக்கிறார்.
குரு பகவானின் ஐந்தாம் பார்வை ஆறாம் வீட்டின் மீதும், ஏழாம் பார்வை எட்டாம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் சூரிய (சிவ ராஜயோகம்), சுக்கிர, சனி, ராகு பகவான்களின் மீதும் படிகிறது.
குரு பகவானின் ஒன்பதாம் பார்வை தொழில் ஸ்தானமான தன் ஆட்சி வீட்டின் மீதும் அங்கு பரிவர்த்தனையில் அமர்ந்திருக்கும் சந்திர (குரு சந்திர யோகம்) பகவானின் மீதும் படிகிறது.
இது தனாதிபதி, தனகாரகர் பரிவர்த்தனையாகும். தற்சமயம் நடக்கும் கேது மஹா தசை அடுத்த ஆண்டு இறுதி வரை நடக்கும். இந்த காலகட்டத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் வடகிழக்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.