என் மகனின் கல்வி எதிர்காலம் எவ்வாறு உள்ளது? அவர் மருத்துவர் ஆவதற்கு வாய்ப்பு உள்ளதா?
-வாசகர், ஈரோடு.
உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், துலாம் ராசி, விசாகம் நட்சத்திரம். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கதிபதியான சந்திர பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டில், குரு பகவானின் சாரத்தில் (விசாகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் உச்ச வீடான ரிஷப ராசியை அடைகிறார்.
பொதுவாக இரண்டாம் வீடு ஆரம்பக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வியைக் குறிக்கும். அந்த வீட்டுக்கதிபதி சந்திர பகவான் ராசியிலும், நவாம்சத்திலும் பலம் பெற்றிருப்பது சிறப்பு.
தைரிய ஸ்தானாதிபதியான சூரிய பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சந்திர பகவானின் சாரத்தில் (திருவோணம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் உச்சமடைகிறார்.
ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்குமதிபதியான செவ்வாய் பகவானும், எட்டாம் வீட்டில் சந்திர பகவானின் சாரத்தில் (திருவோணம் நட்சத்திரம்) அமர்ந்து அவர்கள் இருவரின் பார்வையும் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டின் மீது படிகிறது.
களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்குமதிபதியான குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பெற்றமர்ந்து, ஐந்தாம் பார்வையாக தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக சுகம், வண்டி வாகனம் மற்றும் கல்வி ஸ்தானமான நான்காம் வீட்டையும், ஒன்பதாம் பார்வையாக ஆறாம் வீட்டையும், அங்கமர்ந்திருக்கும் சுக்கிர பகவானையும் (பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானாதிபதி) பார்வை செய்கிறார். லக்னம், கல்வி காரகரான புத பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் ராகு பகவானுடன் இணைந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார்.
சுக்கிர பகவான் ஆறாம் வீட்டில் புத பகவானின் சாரத்தில் (கேட்டை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார். அதோடு கல்வி காரகர் லக்னாதிபதியாகி லக்னத்தைப் பார்வை செய்வதும் சிறப்பு.
அதனால் லக்னம், இரண்டாம் வீடு, நான்காம் வீடு ஆகிய படிப்புக்கு காரணமாகும் மூன்று வீடுகளும், அதிபதிகளும் அதிபலம் பெறுவதாலும், புத பகவான் மருத்துவத்திற்கு காரகத்துவம் (ஒளஷதம்) பெறுவதாலும், சுக்கிர பகவான் மருந்தை தன் ஆதிக்கத்தில் வைத்துக் கொண்டிருப்பதாலும், மருத்துவர் ஆவதற்கு சிறப்பான யோக்கியதாம்சங்கள் உள்ளன.
தற்சமயம் சனி மஹா தசை நடக்கத் தொடங்கியுள்ளதாலும், சனி பகவான் கல்வி ஸ்தானத்தில் அமர்ந்து குரு பகவானின் பார்வையைப் பெறுவதாலும் மருத்துவர் ஆவார் என்று கூறமுடிகிறது. பிரதி சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபட்டு வரவும்.