என் மகன் லண்டனில் வசிக்கிறார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மருமகள் கடந்த ஆண்டு திடீரென்று இறந்துவிட்டார். மகனின் மறுமணம் எப்பொழுது நடக்கும்?
-வாசகி, புது தில்லி.
உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், ரிஷப ராசி, ரோகினி நட்சத்திரம். லக்னாதிபதி, சுகாதிபதி குரு பகவான் பன்னிரண்டாம் வீட்டில் கேது பகவானுடன் இணைந்திருக்கிறார்.
குரு பகவானின் ஐந்தாம் பார்வை சுக ஸ்தானத்தின் மீதும், ஏழாம் பார்வை ஆறாம் வீட்டின் மீதும், அங்கமர்ந்திருக்கும் உச்சம் பெற்று விபரீத ராஜயோகமும் பெற்றுள்ள சந்திர (கஜகேசரி யோகம்) பகவானின் மீதும், ராகு பகவானின் மீதும், ஒன்பதாம் பார்வை எட்டாம் வீட்டின் மீதும், அங்கு நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கும் ஐந்து மற்றும் பன்னிரண்டாமதிபதியான செவ்வாய் (குரு மங்கள யோகம்) பகவானின் மீதும் படிகிறது.
பாக்கியாதிபதி சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றமர்ந்து, சுக்கிர பகவானுடன் இணைந்து குரு பகவானுடன் கேந்திரம் பெற்றிருப்பது சிறப்பு.
இரண்டு மற்றும் மூன்றாம் வீடுகளுக்கதிபதியான சனி பகவான் லாப ஸ்தானத்திலமர்ந்திருக்கிறார்.
களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்குமதிபதியான புத பகவான் தொழில் ஸ்தானத்திலேயே ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் பெற்றமர்ந்திருக்கிறார்.
இதனால் மறுமணம் ஆகுமென்று உறுதியாகக் கூற முடிகிறது. தற்சமயம் குரு மஹா தசையில் புத பகவானின் புக்தி இன்னும் இரண்டாண்டுகள் நடக்க உள்ளதால், இந்த காலகட்டத்திற்குள் மறுமணம் நடக்கும். புத்திர பாக்கியம் உண்டு. எதிர்காலம் வளமாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.