வலுவான ஜாதகம்
எனது மகள் வங்கியில் தற்போது வேலை செய்கிறார். அவரது எதிர்காலம் எப்படி இருக்கும் திருமணம் எப்பொழுது அமையும்...? எந்தத் திசையில் இருந்து வரன் அமையும்..? அரசுப் பணியிலுள்ள வரன் அமையுமா? சொந்தமா... அந்நியமா..? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா?
சந்தானகிருஷ்ணன், தூத்துக்குடி.
உங்கள் மகளுக்கு சிம்ம லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லக்னத்தில் ராகு, ஏழாம் வீட்டில் கேது பகவான்கள் இருப்பதால் சர்ப்ப தோஷம். லக்னாதிபதி லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற்ற லாபாதிபதியுடன் இணைந்து, புத ஆதித்ய யோகத்தைப் பெற்று சந்திர பகவானுக்கு கேந்திரத்தில் இருப்பதால் பஞ்ச மகா புருஷ யோகங்களில் ஒன்றான பத்ர யோகமும் உண்டாகிறது.
ஐந்து மற்றும் எட்டாம் வீட்டிற்கு அதிபதியான குரு பகவான் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக அயன ஸ்தானத்தையும், அங்கமர்ந்திருக்கும் சுக்கிர பகவானையும், ஒன்பதாம் பார்வையாக இரண்டாம் வீட்டையும், அங்கமர்ந்திருக்கும் சுக பாக்கியாதிபதியான செவ்வாய் (குரு மங்கள யோகம்) பகவானையும் பார்வை செய்கிறார். ஆறாம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான், எட்டாம் வீட்டில் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று சந்திர பகவானுடன் இணைந்து, செவ்வாய் பகவானைப் பார்ப்பதால் சந்திர மங்கள யோகம் உண்டாகிறது.
இதனால் வலுவான ஜாதகம் என்று கூற முடிகிறது. தற்சமயம், புத பகவானின் தசையில் ராகு பகவானின் புத்தி நடப்பதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த, தனியார் வேலையிலுள்ள வரன் அந்நிய சம்பந்தத்திலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். அவரும் தனியார் துறையில் நல்ல முறையில் முன்னேறுவார். உடல் நலம், மன வளம் இரண்டுமே சீராக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு வரச் சொல்லவும்.