என் மகனுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? ஜாதகப்படி புத்திர பாக்கியம் உள்ளதா? பெண் உறவில் அமையுமா அல்லது அந்நியமா? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்?
-மாசிலாமணி குருக்கள், தாம்பரம்.
உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசி. லக்னாதிபதி புத பகவான் பாக்கிய ஸ்தானத்தில் தைரிய ஸ்தானாதிபதியான சூரிய (புத ஆதித்ய யோகம்) பகவானுடன் இணைந்திருக்கிறார்.
களத்திர நட்பு ஸ்தானாதிபதி, தொழில் ஸ்தானாதிபதி குரு பகவான் கர்ம ஸ்தானத்திலேயே ஆட்சிபெற்று ராகு பகவானுடன் இணைந்திருக்கிறார். குரு பகவானின் ஐந்தாம் பார்வை தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தின் மீதும், ஏழாம் பார்வை சுக ஸ்தானத்தின் மீதும், அங்கமர்ந்திருக்கும் கேது பகவானின் மீதும், ஒன்பதாம் பார்வை ஆறாம் வீட்டின் மீதும், அங்கமர்ந்திருக்கும் அஷ்டம பாக்கியாதிபதியான சனி பகவானின் மீதும் படிகிறது.
ஆறு, பதினொன்றாமதிபதியான செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்திலேயே மூலத் திரிகோணம் பெற்று, பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். பூர்வ புண்ணியாதிபதி சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்.
ஒன்பதாமதிபதியை குரு பகவான் பார்வை செய்வதால் புத்திர பாக்கியம் உண்டு. தற்சமயம் புத மஹா தசையில் சந்திர பகவானின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் தூரத்து உறவில் பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.