ஃபோர்டு இந்தியா நிறுவனம் பழுது நீக்கித் தருவதற்காக இந்தியாவில் விற்பனை செய்த 39,315 கார்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சென்னை ஆலையில் கடந்த 2004 மற்றும் 2012-ஆண்டுகளுக்கு இடையில் தயாரிக்கப்பட்டு உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்ட ஃபியஸ்டா கிளாசிக், முந்தைய ஃபிகோ மாடல்களில் ஸ்டியரிங் குழாய்களில் பழுது இருப்பது நிறுவனம் தாமாக முன்வந்து நடத்திய சோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.
மொத்தம் 39,315 கார்களில் இவ்வகை பழுது உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள விநியோகஸ்தர்கள் மூலமாக அந்த பழுதடைந்த பாகங்கள் மாற்றித்தரப்படும்.
உலகத் தரமான வாகனங்களை வாடிக்கையாளர்களுக்குத் தயாரித்து அளிப்பதில் நிறுவனம் உறுதியாக உள்ளது. அதன் ஒரு பகுதியாகவே, அவர்களின் பாதுகாப்பு கருதி தாமாக முன்வந்து இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என ஃபோர்டு நிறுவனம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பல்வேறு பாகங்களில் ஏற்பட்ட குறைபாடுகளை சரி செய்து தருவதற்காக ஃபோர்டு இந்தியா நிறுவனம் 2013 செப்டம்பரில் 1,66,021 கார்களையும், 2015 நவம்பரில் 16,444 கார்களையும், கடந்த ஆண்டில் 42,300 கார்களையும் திரும்பப் பெறும் அறிவிப்பை வெளியிட்டது என்பது கவனிக்கத்தக்கது.